முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு போகும் மக்கள்.. 50 பைசா பேப்பர் போதும்.. தமிழக அரசு புதிய உத்தரவு
சென்னை: கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க பொதுமக்கள் பணம் கொடுத்து படிவம் வாங்க தேவையில்லை என்றும்
முதலமைச்சர் தனிப்பிரிவில் வெள்ளைத்தாளில் மனு அளித்தாலே போதும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களின் குறைகளை கேட்க உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டம் கீழ் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐஏஎன் அதிகாரிகள் தலைமையில் தனிப்பிரிவினையே ஏற்படுத்தி உள்ளார். இந்த டீம் மக்களிடம் வாங்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அதுபற்றி பொதுமக்களுக்கு முறைப்படி தகவல்களை தெரிவித்து வருகிறது.
கருணாநிதியின் நிழலுக்கு வயது 80... சண்முகநாதனை சந்திக்க வீடு தேடிச்சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!
பிரச்சனைகள்
இது ஒருபுறம் எனில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள், மாவட்ட அளவில், வட்டார அளவில் நடக்கும் முக்கிய பிரச்சனைகள், அரசின் துறைவாரியாக நடக்கும் பிரச்சனைகள், காவல்துறையினர் மீதான புகார்கள், நிலம் ஆக்கிரமிப்பு சம்பந்தமான புகார்கள் என பல்வேறு தரப்பு புகார்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படுகிறது.
தனி கவனம்
நாள்தோறும் முதல்வர் ஸ்டாலினின் அலுவலகத்திற்கு மக்கள் வந்து மனுக்களை அளித்து வருகிறார்கள். முதியோர் உதவி தொகை முதல், நிலம், வீடு சம்பந்தமான பிரச்சனைகள் வரை பல்வேறு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மிக முக்கிய பிரச்சனைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதை அவரே தலையிட்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.
வசதிகள் அதிகம்
பாலங்கள் கட்டுவது, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆலோசனைகள், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் மக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்புகிறார்கள். நேரடியாக அனுப்ப முடியாதவர்கள் சிஎம் செல் இணையதளத்தில் அனுப்புகிறார்கள். இந்த தளம் புத்தம் புது பொலிவினை பெற்றுள்ளது. இணையதளத்தில் மக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார்களை அனுப்பலாம். அதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெப்சைட்டில் ஆச்சர்யப்படுத்தும் வகையில் இதுவரையிலும் முதலமைச்சர் ஸடாலினின் புகைப்படம் இடம் பெறவில்லை.
என்னென்ன புகார்கள்
சிஎம் செல்லுக்கு காவல்துறை, நெடுஞ்சாலை துறை, பத்திரப்பதிவு துறை, வேளாண்துறை, மதுவிலக்கு துறை, மின்சார துறை என தமிழ்நாட்டில் உள்ள எந்த துறை சார்ந்த புகாரையும் மிக முக்கியமானது என்றால் மட்டும் நீங்கள் முதலமைச்ச்ர் தனிப்பிரிவுக்கு அளிக்கலாம். டாஸ்மாக் கடையை அகற்றுவது, பள்ளிகள் கட்டுவது, நூலகம் கட்டுவது, ஆற்றில் சுற்றுச்சுவர் எழுப்புவது, குளங்களை தூர்வாருவது உள்ளிட்ட முக்கிய பொதுப்பிரச்சனையாக இருந்தால் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பலாம். இதேபோல் உங்களுக்கு வேண்டிய உதவிகள் அதாவது அதிமுக்கிய விஷயங்கள் குறித்து மட்டும் கோரிக்கைகள் வைக்கலாம். ஆனால் பலரும் பக்கத்து வீட்டு பிரச்சனை முதல் இரண்டு நாட்களாக குடிநீர் வரவில்லை என்ற பிரச்சனை சிஎம் செல்லுக்கு அனுப்புவது நடக்கிறது.
படிவம் தேவையில்லை
இதனிடையே தலைமை செயலகம் வரும் மக்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க பணம் கொடுத்து படிவம் வாங்க தேவையில்லை என்றும் வெள்ளைத்தாளில் கொடுத்தால் போதும் என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில், இணையதள வழியில் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
ஆளும் கட்சி பிரமுகர்கள்
ஏன் இந்த உத்தரவு என்று தலைமை செயலக வட்டாரத்தில் விசாரித்த போது, சென்னை தலைமை செயலகத்திற்கு முதலைமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க தினசரி சுமார் 3000 பேர் வருகிறார்கள். இவர்களிடம் அங்குள்ள உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகர்கள் சிலர், ஸ்டாலின் படத்துடன் கூடிய மனுவை ரெடிமேடாக அடித்து அதில் ஊர், பெயர் உள்ளிட்டவற்றை மட்டும் நிரப்புகிறார்கள். மனுவிற்கு 20 ரூபாய், நிரப்புவதற்கு 10 ரூபாய் என கட்டணம் வசூலிக்கிறார்கள். இப்படி தினமும் 3000 பேர் முதல் 4000 பேரிடம் பணம் வசூலித்தது முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்தே முதல்வர் ஒரு வெள்ளை பேப்பரில் மனு எழுதி தந்தால் போதும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். யாரும் அதற்கு என்று படிவங்கள் வாங்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். அதன்படியே உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.