கொரோனா தொற்று.. எந்த மாவட்டத்திலும் 10% மேல் போகாமல் பார்த்துக் கொள்கிறோம்.. விஜயபாஸ்கர் தகவல்
தொற்று பாதிப்பால் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்று விஜயபாஸ்கர் கூறினார்
சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவம் சார்ந்த செலவுகளுக்கு மட்டும் ரூ.1982 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனா தொற்று விகிதம் 10%-க்கு மேல் அதிகரிக்காமல் அரசு கவனித்துக் கொள்கிறது என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லாக்டவுனில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தொற்று பாதிப்பு என்பது அதிகமாகி கொண்டே வருகிறது.. அதே சமயம், அவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியும் வருகிறார்கள்.
தினந்தோறும் உயிரிழப்புகளும் பெருகி வருகின்றன.. இதற்கு முக்கிய பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் அவர் கொரோனா தொற்று நிலவரம் குறித்து சொன்னதாவது:
"தமிழகத்தில் கொரோனா பரிசோதனையில் தொற்று விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.. பாதிப்பு விகிதத்தை 5 சதவீதத்திற்கு கீழ் குறைக்க முயற்சி செய்கிறோம்.. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக உள்ளது... இந்த மரண விகிதத்தை 1 சதவீதத்திற்கும் கீழ் குறைப்பதே அரசின் குறிக்கோளாக உள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா டெஸ்ட்.. ஒரே நாளில் 90,607 சோதனை.. 5692 பேருக்கு தொற்று
தொற்று பாதிப்பு விகிதத்தை 6.4. சதவீதம் ஏற்கனவே குறைந்துள்ளது.. கொரோனா தொற்று கண்டறிய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மட்டுமே செய்கிறோம். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனா தொற்று விகிதம் 10%-க்கு மேல் அதிகரிக்காமல் அரசு கவனித்துக் கொள்கிறது.
இதுவரை, கொரோனா சிகிச்சைக்காக மருத்துவம் சார்ந்த செலவுகளுக்கு மட்டும் ரூ.1982 கோடி செலவிடப்பட்டுள்ளது... அதேபோல, தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90.2 சதவீதமாக உள்ளது... டெஸ்ட் செய்யப்பட்டவர்களில் 6.4 சதவீதம் பேருக்கு தான் தொற்று உறுதியாகியுள்ளது" என்று அமைச்சர் கூறினார்.