வேலை நிறுத்தம்- அரசு மருத்துவர்களுக்கு எதிராக பணிமுறிவு நடவடிக்கை- சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு எதிராக பணிமுறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊதிய உயர்வு, மேற்படிப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் 6 வார காலத்தில் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 6 வாரங்களை கடந்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று 6-வது நாளாக அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடருகிறது, இதனால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் போதிய மருத்துவர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் ஒட்டுமொத்தமாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து முழு அளவில் வேலை நிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணிக்கு வராத 15,000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் பணிக்கு வராத அரசு மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.