தமிழக உள்ளாட்சித் தேர்தல்: வார்டுகளை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைகளின் போது ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி தெர்தலை தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்தது தமிழக அரசு. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் இறுதியில் வெளியாகலாம் என கூறப்பட்டது.
தமிழகம்: கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு!
தேர்தல் நடத்தப்படாததால் சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலம் 5 முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
சட்டசபை இடைத் தேர்தல்கள், லோக்சபா தேர்தல்கள் முடிவுகளைப் போல உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு சவால்விடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை கணிசமான வாக்குகளை முடிவடைந்த தேர்தல்களில் பெற்றிருக்கின்றன.
தினகரனின் அமமுகவும் உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என கூறி வருகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலின் ஒரு கட்டமாக ஆண்களுக்கும் பெண்களுக்குமான வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கு 50% வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி சென்னையில் ஆண்களுக்கு 95, பெண்களுக்கு 105, திருச்சி மாநகராட்சியில் பெண்களுக்கு 33 வார்டுகள், சேலம் மாநகராட்சியில் பெண்களுக்கு 30 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வார்டுகள் புதியதாக வரையறை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.