புதுப் பொலிவு பெறும் அங்கன்வாடிகள்.. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்..!
சென்னை: தமிழகத்தில் அரசு அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.
தமிழக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது. குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தவண்ணம் உள்ளனர். அதில் ஒரு கட்டமாக இன்று அரசு அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
தற்போது தனியார் நர்சரிப் பள்ளிகளில்தான் எல்கேஜி, யுகேஜி ஏன் ப்ரீகேஜி வகுப்புகள் கூட உள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளையும் மாற்றும் வகையில் கிண்டர்கார்டன் வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் முறையாக பள்ளி கல்வித்துறை சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், சமூகநலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விளம்பரம் மற்றும் செய்து தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலந்து கொண்டு இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியர்கள், மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்களில் பள்ளிக்கல்வித்துறை சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
2381 அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட்ட உள்ள எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புக்கள் மூலம் 52,932 குழந்தைகள் பயன்பெறுவார்கள். நிகழ்ச்சியில் மாணவ மாணவர்களுக்கு பள்ளி சீருடை, பாட புத்தகம் ஆகிய கல்வி உபகரணங்களை முதல்வர் வழங்கினார்.