தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி சிஇஓவாக இந்துத்துவா ஆதரவாளர் நியமிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைப்பு?
சென்னை: தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி முதன்மை செயல் இயக்குநராக இந்துத்துவா ஆதரவாளரான மணிகண்ட பூபதி என்பவரை நியமித்த உத்தரவை அரசு தரப்பு நிறுத்தி வைத்துள்ளதாக திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி டிவி சேனலை நடத்தி வருகிறது. இத்தொலைக்காட்சியை நிர்வகிப்பதற்கு முதன்மை செயல் இயக்குநர் பதவியை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டன. இதன் முடிவில் மணிகண்ட பூபதி என்பவர் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி டிவி சேனல் முதன்மை செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதற்கு பத்திரிகை துறையினரும் அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கல்வித் தொலைக்காட்சி சிஇஓ பதவியில் வலதுசாரி ஆதரவாளர்! நியமனத்தை ரத்து செய்க -ஜவாஹிருல்லா போர்க்கொடி!
சுசி திருஞானம் கடும் எதிர்ப்பு
மூத்த பத்திரிகை ஆசிரியரும் கல்வியியல் துறை ஊடகவியலாளருமான சுசி திருஞானம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியது பெரும் சர்ச்சையாகவே வெடித்தது. அக்கடிதத்தில், தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரிடையே அறிவியல் பார்வையையும் தன்னம்பிக்கையையும் விதைப்பதில் மவுனமான பெரும் பங்களிப்பை நான் செய்திருப்பதை தலைமைச் செயலரும், முதல்வரின் முதன்மைச் செயலாளரும் நன்கறிவார்கள். பிரபல தொலைக்காட்சிகளில் எனது 'சந்திப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சியும், 'நம்பிக்கை' நிகழ்ச்சியும் மாணவர்களின் உயர்கல்வி - வாழ்க்கைப்பணி தேர்வுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் என்பதை முன்னணி ஊடகவியலாளர்கள் அனைவரும் அறிவார்கள்.
நாக்பூரிலா முடிவு?
சமத்துவம், சமூக நீதி தத்துவங்களில் புடம்போடப்பட்ட என்னை திட்டமிட்டு தவிர்த்து விட்டு, கோமிய கோட்பாட்டாளரை (மணிகண்ட பூபதி) கல்வி டிவி-யின் தலைமைப் பொறுப்பில் நியமித்தது யார்? தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா? மீண்டும் அடிமைப்படவா பெற்றோம் சுதந்திரம்? இதற்காகவா தமிழ்நாட்டின் ஆக்கபூர்வ ஊடகவியலாளர்கள் இரவுபகலாக உழைத்தோம்? 'திராவிட மாடல் அரசு' என்ற கம்பீரமான தமிழரசு ஓராண்டு சாதனை மலரில், "நான் முதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்த நாள் தமிழ்நாட்டின் பொன்னாள்" என்று எத்தனை நம்பிக்கையோடு எழுதினேன். அதற்குள் எத்தனை மாற்றங்கள்.. வெட்கம் தான் மிஞ்சுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
ஜவாஹிருல்லா கண்டனம்
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்காக தொலைக்காட்சி வழியே கல்வியை அளிப்பதற்குத் தொடங்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முதன்மை செயல் அலுவலராக (சிஇஓ) மணிகண்ட பூபதி என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு நியமனம் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழகத்தில், வலதுசாரி சிந்தனைக் கொண்ட ஒருவரை மாணவர்களுக்குக் கல்வி அறிவூட்டும் தொலைக்காட்சிக்கு முதன்மை செயல் அலுவலராக நியமனம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமூகநீதி மற்றும் சமத்துவத்தில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தகுதிமிக்க ஆளுமைகள் தமிழகத்தில் உள்ளபோது தொடர்ந்து சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராகக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஊடகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரைக் கல்வித் தொலைக்காட்சிக்கு முக்கிய அதிகாரியாக நியமித்திருப்பது ஏற்புடையது அல்ல எனவும் கூறியிருந்தார்.
உத்தரவு நிறுத்தி வைப்பு?
இதனைத் தொடர்ந்து திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கல்வி தொலைக்காட்சிக்கு CEO பதவிக்கு மொத்தம் 70 விண்ணப்பங்கள் வர பெற்று 12 பேர் அதிகாரிகள் கொண்ட தேர்வு குழு தான் யாரின் பரிந்துரையும் இல்லாது அனைவரிடமும் நேர்காணல் வைத்து ஒருவரினை தேர்வு செய்து உள்ளது! தேர்வு செய்யபட்டவர் தமிழ்நாடு அரசின் கல்வி கொள்கைக்கு எதிரான சிந்தனை உள்ளவர் என்று தெரிய வந்ததால் அந்த தேர்வு குழுவின் உத்தரவினை பள்ளி கல்வி துறை அமைச்சர் நிறுத்தி வைக்க உத்தரவு போட்டுள்ளார்! இது தெரியாது அமைச்சரினை வசை பாடுவது ஏற்புடையது அல்ல! என கூறியுள்ளார்.