கஜா புயல்.. எந்தெந்த இடங்களில் எவ்வளவு பாதிப்பு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை: எந்தெந்த பகுதிகளில் கஜா புயல், எந்த அளவுக்கு பாதித்தது என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு கஜா புயல் பாதித்த பகுதிகள் தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கொடைக்கானல், தஞ்சை ஆகிவை புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மேற்கு தாலுகா, திருச்சியில் மருங்காபுரி, மணப்பாறை தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, நத்தம் ஆத்தூர், பழனி, ஒட்டன்சந்திரம், வேடசந்தூர் தாலுகாக்கள்,கரூர் மாவட்டத்தின் கடவூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கண்மங்கலம் தாலுகாக்கள், கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோயில், குறைந்த பாதிப்பு ஏற்பட்ட இடங்களாகவும் தமிழக அரசு தனது அரசாணையில் அறிவித்துள்ளது.
இதேபோல் மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில தாலுகாக்கள் கஜா புயலால் குறைந்த அளவு பாதிக்கப்பட்டதாகவும் தமிழ அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது.