அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு.. வெளியானது அரசாணை
சென்னை: 2019-ல் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அன்று ஜல்லிக்கட்டு சம்பந்தமாக நடைபெற்ற வரலாறு காணாத போராட்டத்தின் விளைவால்தான், தற்போது தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக ஜனவரி மாத பொங்கல் திருவிழாவின்போது இந்த ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் ஜனவரி மாதமும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவாகி உள்ளது.
அரசாணை
இதற்கான அரசாணையும் தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் இந்த இடங்களில்தான் ஜல்லிக்கட்டு களைகட்டும். அதன்படி இந்த வருடமும் உற்சாகத்துக்கு பஞ்சம் இருக்காது.
அலங்கா நல்லூர்
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விரைவில் வெளியீடு
இதைதவிர, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை தேதி வாரியாக விரைவில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஏற்பாடுகள் தயார்
எனினும், தமிழக அரசின் அரசாணை அறிவிப்பினால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மற்றும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுக்காக தயாராகி வருகிறார்கள்.