டெல்லியில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.. கொங்கு ஈஸ்வரன்
டெல்லியில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்லிக்கு பயில செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டெல்லி சென்று படிக்கும் தமிழக மாணவர்களின் இறப்பிற்கு உண்மை காரணத்தை கண்டறியவும் தமிழக அரசு உரிய விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வேண்டுகோள் வித்துள்ளது.
இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
ஐஏஎஸ் கனவு
டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்று வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, நேற்றையதினம் அவரது அறையில் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து ஐஏஎஸ் ஆகவேண்டுமென்ற கனவுடன் டெல்லிக்கு சென்ற மாணவி ஸ்ரீமதி.
பாதுகாப்பு கேள்விக்குறி
தன்னம்பிக்கையுள்ள, படிப்பில் ஆர்வமுள்ள, சாதிக்க துடிக்கும் மாணவர்கள் தான் தொலைதூரமென்றாலும் மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கல்வி கற்க விரும்பி செல்கிறார்கள். ஆனால் அப்படி மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. டெல்லியில் பயிலும் தமிழக மாணவர்கள் இறப்பதும் தொடர் கதையாகிவிட்டது.
மர்மமான மரணம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை பயின்று வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவன் 2016 -ஆம் ஆண்டு ஜூலை மாதமும், டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவன் 2018 -ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டதை நாம் அறிவோம்.
இறப்புக்கு காரணம்?
டெல்லியில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்தான் நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்கள் இறப்பதற்கான காரணங்களை கண்டறிந்து களையாமல் இத்தகைய உயிரிழப்புகளை தடுக்க முடியாது.
ஸ்ரீமதிக்கு இரங்கல்
தமிழக அரசு எப்போதும் போல ஸ்ரீமதி இறப்பையும் கடந்து செல்லாமல் உரிய விசாரணையை நடத்தி இறப்பிற்கான காரணத்தை வெளிக்கொணர வேண்டும். மற்ற மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும். மாணவி ஸ்ரீமதியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஈஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.