சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ1,000 அபராதம் விதிக்கலாம்: டாக்டர் ராமதாஸ்
சென்னை: சென்னையில் முக கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ1,000 அபராதம் விதிக்கலாம் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:
சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டும், மக்களிடம் விழிப்புணர்வு வரவில்லை. அதனால் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று தோன்றுகிறது.
தமிழகத்தில் இன்று 1,843 பேருக்கு கொரோனா- முதல் முறையாக ஒரே நாளில் 44 பேர் மரணம்
கொரோனா நோய்ப்பரவல் குறித்து எதுவும் தெரியாமல், எல்லாம் தெரிந்தவர்களைப் போல காட்டிக் கொள்வதற்காக சமூக ஊடகங்களில் வதந்திகளையும், பீதிகளையும் பரப்புபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் எல்லை மீறும் போது கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!
செவிலித்தாய்க்கு வீரவணக்கம்
சென்னை ராஜிவ்காந்தி பொதுமருத்துவமனையில் பணியாற்றி கொரோனா தாக்கி உயிரிழந்த செவிலியர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன. தங்கலட்சுமி என்ற அந்த செவிலித்தாய் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்தவர். நோய் பாதித்தும் சேவையைத் தொடர்ந்து உயிர்த்தியாகம் செய்த அவருக்கு வீரவணக்கம்! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.