மதுபான கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு-:தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கூடாது- ஸ்டாலின், விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தில் மதுபான கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
Recommended Video
கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுனில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நாடு முழுவதும் மதுபான கடைகளும் திறக்கப்பட்டன. தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.
லாக்டவுனுக்குப் பின் தமிழக ரசாயன ஆலைகள் மீண்டும் சுற்றுச் சூழல் சான்றிதழ் பெற வேண்டும்- திருமாவளவன்
மக்கள் போராட்டங்கள்
இந்த மதுபான கடைகளில் சமூக விலகல் அல்லது தனிநபர் இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. மேலும் தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. அத்துடன் 40 நாட்களில் இல்லாத அளவுக்கு மது அருந்துதல் தொடர்பான குற்றச் செயல்களும் அதிகரித்தன. இதனை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் பல்வேறு தரப்பினர் முறையிட்டனர்.
கடைகளை மூட உத்தரவு
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லாக்டவுன் முடியும் வரை மதுபான கடைகளைத் திறக்கக் கூடாது; ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்பீலுக்கு விஜயகாந்த் எதிர்ப்பு
இந்நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது. மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது என வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக அரசு ஏற்க வேண்டும்- ஸ்டாலின்
இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். ஸ்டாலின் அறிக்கையில், நிர்வாகத் திறமையற்ற குடிக்கெடுக்கும்_அதிமுக அரசுக்குத் தக்க பாடமாக, ஊரடங்கு காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும் என்னும் உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்' உத்தரவை திமுக வரவேற்கிறது. மேல்முறையீட்டு முயற்சிகளைத் தவிர்த்து உத்தரவை ஏற்று அதிமுக அரசு நடக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.