சாட்டையை சுழட்டுவாரா எடப்பாடியார்.. சுதாரிக்க வேண்டும் அதிமுக அரசு.. சுளுக்கெடுக்க தயங்க கூடாது!
தமிழகத்தில் வன்முறை ஏற்படாத வண்ணம் முதல்வர் அதிரடியில் இறங்க வேண்டும்
சென்னை: சுப்ரீம் கோர்ட் இன்று போட்ட போடு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு நல்ல எச்சரிக்கையாகும். காரணம், கலவரங்கள் ஏற்படுவதை விட அதை ஏற்பட விடாமல் தடுப்பதுதான் புத்திசாலித்தனமானது. இன்று டெல்லி போலீஸ் வாங்கிக் கட்டியதைப் போல நாளை தமிழ்நாட்டிலும் நடந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
மத, இன ரீதியான வார்த்தை மோதல்கள் கூட இல்லாமல், உடனடியாக தமிழக முதல்வர் அதிரடி காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
டெல்லியில் நடந்து வரும் வன்முறைக்கும், தமிழக அரசுக்கும் நெருங்கிய, நேரடியான சம்பந்தம் இல்லைதான்.. ஏன் வன்முறைகளுக்கும், தமிழகத்துக்குமே கூட சம்பந்தம் இல்லைதான். ஆனால் சில விஷமிகள் வன்முறையை ருசித்துப் பார்க்க ஆசைப்படுகின்றனர். எனவேதான் சில விஷயங்களை அதிமுக அரசு தட்டிக் கேட்க வேண்டிய நிலையிலும், கண்டிக்க வேண்டிய சூழலிலும் உள்ளது.
நீங்கதான் பொறுப்பு.. உடனே ராஜினாமா பண்ணுங்க.. அமித் ஷாவிற்கு சோனியா செக்.. 6 முக்கிய கேள்விகள்!
முதல்வர்
"சிஏஏ-வால் யார் பாதிச்சிருக்காங்க.. யாராவது ஒருத்தரை காட்டுங்க" என்று முதல்வர் எடப்பாடியார் சட்டசபையில் அன்று ஆவேசமாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு சீமான் பதில் சொல்லும்போது, "பாதிச்சவங்களை காட்டுன்னு சொல்லக்கூடாது.. யாரும் பாதிச்சிடகூடாதுன்னுதான் இந்த சட்டம் வேணும்னு கேட்கிறோம்.. இது ஒரு வருமுன் காப்போம் மாதிரிதான்" என்று விளக்கம் தந்திருந்தார்.
திமுக எம்பி
சீமான் அன்று சொன்னதையும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக இந்த சட்டத்தை எதிர்த்தது எவ்வளவு நியாயமானது? டெல்லி மாணவர்களின் போராட்டம் எவ்வளவு ஆழமானது என்பதையும் இன்று யாராலும் மறுக்க முடியாது. முதல்வர் அன்று ஆவேசமாக கேட்டதைதான் திமுக எம்பி செந்தில்குமார் இன்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். "இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி எங்கே?" என்று அவர் கேட்ட கேள்வி நியாயம் என்றுகூட தோன்றுகிறது... காரணம், டெல்லியில் நடந்த கலவரத்தின் போது தமிழ்நாட்டை சேர்ந்த செய்தியாளர் அரவிந்த் குணசேகரன் தாக்கப்பட்டுள்ளார்.. இது தமிழக அரசு உற்று கவனிக்க வேண்டும்.
கபில் மிஸ்ரா
அதேபோல, பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சை தொடர்ந்துதான் இந்த கலவரம் இன்னும் விடாமல் நடந்து வருகிறது... அதேபோலதான் இங்கு எச். ராஜா உள்ளிட்டோரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுகிறார்கள்... துவேஷமாக டிவீட் செய்கின்றனர். "குறிப்பாக, "கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்" என்று எச். ராஜா தெரிவித்துள்ளர்.
தமிழக அரசு
இதற்கு தமிழக அரசுதான் விளக்கம் கேட்க வேண்டும். ஒருவேளை எச். ராஜா சொல்வதுபோலவே வண்ணாரப்பேட்டையில் கலவரம் வந்துவிட்டால், தமிழக அரசு அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. நேற்று முன்தினம் இதே எச்.ராஜா ஒரு பேட்டி தந்திருந்தார்.. "விநாயகர் சதுர்த்தி வரட்டும், அப்போ பார்த்துக்கறேன்" என்று சவாலாகவே தெரிவித்திருந்தார்.. அப்படியானால் வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் வன்முறைகள் யாரால், எதனால் நடக்கின்றன? இதுவும் திட்டமிட்ட ஒன்றுதானா? அப்போது தமிழக அரசால் போடப்படும் பாதுகாப்புகள் எதற்காக? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒரு ஸ்டைல் இருக்கும்... அதாவது முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார் எதுவாக இருந்தாலும். அவரது ஆட்சிக்காலத்தில் ஒரு ஜாதிக் கலவரம் கிடையாது, மதக் கலவரம் கிடையாது. கலவரம் ஏற்படும் வகையில் ஏதாவது சிறு சலசலப்புஎழுந்தால் கூட அதிரடியாக நடவடிக்கை எடுத்து ஒடுக்கி விடுவார். மக்கள் அத்தனை நிம்மதியாக இருந்தனர் ஜெயலலிதா ஆட்சியில். ஆனால் இன்று டிவிட்டரைத் திறந்தால் துவேஷ கருத்துக்கள் மிக மிக மோசமாக வந்து விழுகின்றன. எல்லாவற்றையும் பார்த்து மக்கள் பதை பதைத்துப் போகும் நிலையில்தான் உள்ளனர்.
Recommended Video
சுப்ரீம் கோர்ட்
பச்சையாகவே மிரட்டுகின்றனர். வெறித்தனமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இவர்களை தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தாமல் அமைதி காப்பது அச்சமாக இருக்கிறது. இது எல்லாமே தமிழகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், அதுசம்பந்தமான ஆவேச கருத்துக்களும்தான்.. இதை முதல்வர் எடப்பாடியார் உடனடியாக தலையிட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. தமிழக அரசு அதிரடியாக செயல்பட்டாக வேண்டும்... இல்லாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் இன்று டெல்லி போலீஸ் வாங்கிக் கட்டியதைப் போல நாளை இங்கும் நடக்க வாய்ப்புள்ளது. முதல்வர் அதிரடி காட்டுவாரா? மதவாதமும், துவேஷமும் பரப்பி வராமல் கடிவாளம் போடுவாரா?