பேருந்து வசதியின்றி அவதிப்படும் அரசு ஊழியர்கள்... கூடுதலாக பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கிய நிலையில், பணிக்கு செல்ல போதிய பேருந்து வசதியில்லாமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவிய அளவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நான்காம் கட்ட லாக்டவுன் அறிவிப்பின் போது, தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தது. அதன்படி அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் வாரம் 6 நாட்களும் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அரசுப் பணிக்கு செல்லும் ஊழியர்கள், அலுவலர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. அதில் அதிகபட்சம் ஒரு பேருந்தில் 20 பேருக்கு மேல் பயணிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசின் அழைப்பை ஏற்று அரசு ஊழியர்கள் தன்னலம் கருதாது பணிக்கு நேற்று திரும்பியுள்ளனர். இதனால் வழக்கம் போல் அரசு அலுவலகங்கள் தமிழகத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன.
இதனிடையே பெரும்பாலான அரசு ஊழியர்கள் சொந்தமாக இரு சக்கர வாகனத்தில் அலுவலகங்கள் செல்கின்றனர். இதில் பெண் ஊழியர்கள் மட்டும் அரசு இயக்கும் சிறப்பு பேருந்துகள் மூலம் பணியிடங்களுக்கு சென்று வருகின்றனர். அரசு அலுவலகங்கள் தொடங்கி 2 நாட்கள் ஆகும் நிலையில், அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து அரசு கூடுதல் எண்ணிக்கையில் தங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பூசி எதற்கு.. கொரோனா வைரஸ் தானாகவே பொசுங்கி போகும்.. WHO முன்னாள் இயக்குநர் சூப்பர் தகவல்
தற்போது காலை 8 மணி முதல் 10 மணி வரை பல்வேறு வழிதடங்களை ஒருங்கிணைத்து அரசு அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் மீண்டும் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை மீண்டும் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே சமூக விலகலை கடைபிடித்து தடையின்றி பணிக்கு வந்து செல்ல முடியும் என்பது அரசு அலுவலர்களின் கோரிக்கையாக உள்ளது.