எஸ்வி சேகரின் கெட்டு போன பால்.. டக்குன்னு 9 புதுப் பாக்கெட் கொண்டு வந்து கொடுத்து குளிர்வித்த ஆவின்!
3 மணி நேரத்தில் ஆவின் பால் பாக்கெட் வந்துவிட்டது என எஸ்வி சேகர் ட்வீட்பதிவிட்டுள்ளார்
சென்னை: எஸ்வி சேகர் வீட்டில் காலையில் வாங்கின பால் பாக்கெட் கெட்டு போய்விட்டதாம்.. அதனால், பால் கெட்டுப் போனதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எஸ்வி சேகர் புகார் செய்ததும், பால் பாக்கெட் மாற்றி தரப்பட்டது.. 'பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார்.. தங்களுக்கு நன்றி" என்று எஸ்வி சேகர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் மக்களிடம் நெருங்கி வருகிறார்.. யாராக இருந்தாலும், தங்கள் கோரிக்கைகளை பொதுமக்கள் முதல்வரிடம் தெரிவிக்க, அதன் பேரில் எடப்பாடியாரும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கொரானா தடுப்பு நடவடிக்கைக்கு நடுவே, இதுபோன்ற கோரிக்கை, புகார்களை முதல்வரே நேரடியாக தலையிட்டு, கவனித்து, அதிரடிகளை காட்டி வருவது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பாஜக ஆதரவாளரும், நடிகருமான எஸ்வி சேகரும் ஒரு புகார் தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார்.
ட்வீட்
"இன்று காலை வாங்கிய ஆவின் பால் 13 பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காச்சும் போது திரிந்து விட்டது. வீட்டில் 90 வயது தாயார் 7 வயது 2 வயது குழந்தைகள் உள்ளது. நான் என்ன செய்வது' என்று கேள்வி எழுப்பி இருந்தார்... எஸ்வி சேகரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்வீட்டை பார்த்ததும் ட்விட்டர்வாசிகள் ஏகப்பட்ட கமெண்ட்களை பதிவிட ஆரம்பித்தனர்.
நன்றி - வாழ்த்துக்கள்
இப்போது இன்னொரு ட்வீட் போட்டுள்ளார் எஸ்வி சேகர்.. அதில், ‘நான் தங்களுக்கு பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்' என தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்
இந்த ட்வீட்டை பார்த்ததும் திரும்பவும் ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. கொரோனா நேரத்தில் மக்களின் உயிரை காக்க வேண்டிய ஆயிரக்கணக்கான வேலைகள் இருக்கும் நிலையில் எஸ்வி சேகருக்கு பால் பாக்கெட்டுக்கள் மாற்றி கொடுப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என்று கண்டனங்கள் ஒரு பக்கம் எழுந்து வருகின்றன.
கமெண்ட்கள்
அதேபோல, ஒருசிலர் கிண்டலடித்தும் பதிவு போட்டு வருகின்றனர்.. "என் வீட்டில் 2 பாக்கெட் ஆவின்பால் கெட்டு போய் விட்டது. ஏஜெண்ட் உங்களது தவறுக்கு பொறுப்பேற்க முடியாது என்று சொல்லி விட்டார். எனக்கும் @CMOTamilNadu விடம் சொல்லி வேறு பாக்கெட் வாங்கி தர இயலுமா? நான் பென்சனில் வாழ்க்கை நடத்தறவன்" என்று ஒருவர் கேட்டுள்ளார். "இதுக்கு எல்லாம் முதலமைச்சரிடம் புகார் செய்வதா? ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இதுதான் வேலையா ? என்று எஸ்.வி. சேகரை கலாய்த்து வருகின்றனர்.