தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 2 வீதம் 13.48 கோடி துணி முக கவசங்களை வழங்க அரசு முடிவு
சென்னை: தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 2 முக கவசம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து ரேசன் அட்டைதாரருக்கும் விலையில்லாத துணியிலான முககவசங்களை வாங்கி வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதை கணக்கிடும்போது, தலா ஒருவருக்கு 2 தரமான மறுபடியும் உபயோகிக்கத்தக்கதான 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 துணி முககவசங்கள் வாங்கப்பட வேண்டும்.
அவசர காலத்தில் பாதுகாப்பு உபகரணமாக இதை கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது. எனவே அவசர கொள்முதலை மேற்கொள்ளலாம். இந்த கொள்முதலுக்கான விலைப்புள்ளியை மதிப்பிடுவதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசை வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக நாடுகளில் பகீர்.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு திடீரென கிடுகிடு உயர்வு- இந்தியா 3-வது இடம்
அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு விலை நிர்ணயக் குழுவை அமைத்து அரசு உத்தரவிடுகிறது. இந்தக் குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர் செயல்படுவார். இயற்கை பேரிடர் மேலாண்மை இயக்குனர், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் உள்பட 6 பேர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள். இவ்வாறு சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருந்தது.