உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு- நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம்
சென்னை: உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க சென்னையில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீட்டை கடந்த பாஜக அரசு அமல்படுத்தியது. இது பெரும் விவாதத்துக்குரியதாகி உள்ளது.
இது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 10% இடஒதுக்கீடு என்பது கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு- சமூக நீதியை சாகடிக்கும் சட்டம். இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 10% இட ஒதுக்கீடு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்டு முடிவெடுப்போம். அதேநேரத்தில் 69% இடஒதுக்கீட்டையும் பாதுகாப்போம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் இன்று எம்.பி.பி.எஸ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வரும் திங்கள்கிழமையன்று மாலை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த கூட்டத்தில் 10% இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்படும் என்றார்.