மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள்-7.5% உள் ஒதுக்கீடு தரும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்
சென்னை: தமிழக சட்டசபையில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வுகளால் தமிழக மருத்துவ மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தேமுதிகவின் 16ம் ஆண்டு தொடக்க விழா- சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம்- விஜயகாந்த்
நீட் அச்சத்தால் தற்கொலைகள்
நீட் தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய நாள் ஒரே நாளில் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபை, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டும் வருகிறது.
7.5% உள் ஒதுக்கீடு
இதனிடையே மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கை குறைந்ததால் தமிழக அரசு அந்த மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு தரும் மசோதாவை நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
மசோதா இன்று தாக்கல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் இம்மசோதாவை தாக்கல் செய்தார். தனியார் பள்ளிகளில் படிக்கும் 25% ஏழை மாணவர்களும் தமிழக அரசின் இந்த உள் இடஒதுக்கீட்டால் பயன்பெற உள்ளனர். இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நீதிபதி கலையரசன் குழு
இந்த உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய நீதிபதி கலையரசன் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. அதன் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவை இந்த உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இன்று மசோதா நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.