அங்கீகாரம் பெறாத நர்சரிப் பள்ளிகளை இழுத்து மூடும் தமிழக அரசு
சென்னை: தனியார் பள்ளிகளில் இதுவரை அங்கீகாரம் பெறாத நர்சரிப் பள்ளிகளை இழுத்து மூடப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதியுதவி, சுயநிதிப் பள்ளிகள் என 44214 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் 8949 உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம் 14 லட்சத்து 88 ஆயிரத்து 235 மாணவர்கள் தொடக்கக் கல்வி பயில்கின்றனர். தனியாரால் நடத்தப்படும் தமிழ்நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன இதில் 6,202 நர்சரி, பிரைமரிப் பள்ளிகளும் உள்ளடங்குகின்றன.
இந்தப் பள்ளிகளில் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குனரிடமும், மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக் கல்வி இயக்குனரிடமும் அங்கீகாரம் பெற்று நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்குவதற்கு அங்கீகாரம் உள்ள பள்ளிகள், இல்லாத பள்ளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்துவார்கள். ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் தங்களது அங்கீகாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இடப் பற்றாக்குறை போதிய கட்டுமானங்கள் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் மறுபடியும் புதுப்பித்து வழங்கப்படுவது இல்லை.
இந்த நடைமுறை கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல பிஞ்சுகள் தீயில் கருகி உயிர் இழந்த மோசமான நிகழ்வுக்குப் பிறகு அரசால் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அதிலும் பல இடங்களில் ஓட்டைகள் உள்ளதாக சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் தமிழக கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முறையாக அங்கீகாரம் பெறாமல் 760 நர்சரிப் பள்ளிகள் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளின் தடையில்லாச் சான்றிதழ், பள்ளிகளின் பரப்பு, கட்டடத்தின் தன்மை, தீ பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் சிக்கின. இந்தப் பிரச்சனையில் இதுவரை 760 பள்ளிகள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் பள்ளிகளை மூடுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாகத் திருப்பூரில் 86 பள்ளிகளும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 55 பள்ளிகளும் முறையாக அங்கீகாரம் பெறாமல் உள்ளன.
இந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதோடு மேலும் அங்கீகாரத்தை புதுப்பிக்க கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் அங்கீகாரம் பெறவில்லை என்றால், அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் இந்த மாத இறுதியில் மூடப்படும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.