தமிழகத்தில் போதிதர்மர் சிலை நிறுவத் திட்டம்... சுற்றுலாத்துறை தீவிரம்
சென்னை: சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் அண்மையில் மாமல்லபுரம் வந்து சென்றுள்ள நிலையில், தமிழகத்தில் போதிதர்மர் சிலையை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான பணிகளில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போதிதர்மர் சிலையை நிறுவுவதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்களாம் சுற்றுலாத்துறை அதிகாரிகள்.
பல்லவ மன்னர்கள் வழி
பல்லவ மன்னர்கள் வம்சாவழியை சேர்ந்த போதித்தர்மர் புத்த மதத்தினரால் கொண்டாடப்படும் மிகப்பெரிய துறவியாவார். இளம் வயதிலேயே புத்தமதத்தை தழுவிய போதித்தர்மர், அதனை பரப்புவதற்காக தமிழகத்திலிருந்து சீனா பயணம் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது.
சுற்றுலாத்துறை தீவிரம்
போதிதர்மர் சிலையை பிரமாண்டமாக தமிழகத்தில் நிறுவ சுற்றுலாத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப்பெரிய 2-வது சிலை என்ற பெருமையோடு போதி தர்மர் சிலையை வடிவமைக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
போதிதர்மர் சிலை நிறுவுவது தொடர்பான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் நிதியை பெற தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இம்மாத இறுதியில் போதிதர்மர் சிலை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசை அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த இடம்?
சென்னை, காஞ்சிபுரம், மாமல்லபுரம், நாகை, திருவாரூர், உள்ளிட்ட 6 இடங்களை இதற்காக தமிழக அரசு தரப்பில் தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அதில் ஏதாவது ஒரு இடத்தில் பிரமாண்ட போதிதர்மர் சிலை நிறுவப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.