ஊருன்னா ஊட்டி மாதிரி இருக்கணும்.. கலெக்டர்னா திவ்யா மாதிரி.. பிடிங்க பசுமை விருது!
சென்னை: "சொர்க்கம் என்பது நமக்கு.. சுத்தமுள்ள ஊருதான்.." இதைதான் இந்த 3 மாவட்ட கலெக்டர்களும் நிரூபித்து, ஒரு அவார்டையும் முதல்வர் கையால் வாங்கி விட்டனர்!
உயிரின வாழ்க்கை சூழலை பேணி பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதில் மிக முக்கியமான மாநிலம் நம்ம மாநிலம்தான்.
அதனால்தான் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட கலெக்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களை பாராட்டும் வகையிலும், வருஷா வருஷம் 3 மாவட்ட கலெக்டர்களை தேர்வு செய்து பசுமை விருதினை வழங்கி வருகின்றது.
அந்த வகையில், நீலகிரி, துாத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்களுக்கு பசுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். நீலகிரி கலெக்டர் இன்னசன்ட் திவ்யா, ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துாரி ஆகியோருக்கு பசுமை விருதுகள் இன்று வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் கழிவுகளை சிறப்பாக கையாளுதல் உள்ளிட்ட பசுமை நடவடிக்கைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக நீலகிரியை எடுத்து கொண்டால், பிளாஸ்டிக் என்றாலே மாவட்ட நிர்வாகம் கொதித்தெழுந்துவிடும். அதேபோல, சுற்றுலா பயணிகளையும் பிளாஸ்டிக் கொண்டு வர வேண்டாம் என்று சலிக்காமல் வேண்டுகோள் விடுத்து கொண்டே இருக்கும்.
துணிமணிகள், காய்கறி, சிக்கன், மட்டன் என எது வாங்கினாலும், ஒரு பேப்பரில்தான் சுற்றி கொடுப்பதுதான் இங்கு வழக்கம். இதற்கு மாவட்ட மக்களும் நன்றாக ஒத்துழைப்பு தருகின்றனர். அன்று, பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான ஓர் அறப்போராட்டத்தை தொடங்கி அதில் வெற்றியும் வெற்றிருக்கிறார் நீலகிரி மாவட்ட கலெக்டர் திவ்யா!