அடிக்குது குளிரு.. 3 நாட்களுக்கு பனி கொட்டுமாம்.. மங்கி கேப், ஸ்வெட்டர் சகிதம் நடமாடுங்க மக்களே!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பனி பொழிவு நீடிக்கும் என கூறப்படுகிறது.
சென்னை: தமிழக மக்கள் மங்கி கேப், ஸ்வெட்டருடனே இருக்க வேண்டியதுதான். காரணம், இன்னும் 3 நாட்களுக்கு பனி கொட்டோ கொட்டென கொட்ட போகிறதாம்!
மழையை காணோமே என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தால், இப்படி யாருமே எதிர்பார்க்காத வகையில் குளிர் நம்மை வாட்டி வதைத்து வருகிறது.
அதிலும் உச்சி வெயில் மண்டையை பிளக்கும் வேலூர், சென்னை, மதுரை போன்ற மாவட்டங்களில் குளிரின் அளவு அதிகரித்தே உள்ளது. காலையிலும், மாலையிலும் பனி மூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலைதான் நீடிக்கும் என வானிலை அய்வு மையம் நேற்று எச்சரித்தது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மூடு பனி நிலவும் என்று கூறியது.
ஆனால் கடலோர மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் பனியின் அளவு குறையும் என்ற ஆறுதல் தகவலையும் சொன்னது. குறிப்பாக என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் நீலகிரி, கொடைக்கானலை பற்றி சொல்லவே தேவையில்லை. ஊட்டியில் குளிரின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகம் நிலவி வருவதை வானிலை ஆய்வு மையமே சுட்டி காட்டியது. எப்படி இருந்தாலும் இன்னும் 3 நாட்களுக்கு தமிழக மக்கள் குளிரின் பிடியில் இருந்து தப்புவது கடினம்தான் என்பதால் மக்கள் கொஞ்சம் கவனமுடனே இருந்து கொள்வது அவசியம்!!