நாம்தான் டாப்.. தமிழகம்தான் தொழில் தொடங்க ஏற்ற மாநிலம்.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் உரை!
இந்தியாவிலேயே முதலீடு செய்ய மிக எளிதான மாநிலம் தமிழகம்தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.
சென்னை: இந்தியாவிலேயே முதலீடு செய்ய மிக எளிதான மாநிலம் தமிழகம்தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. தமிழக அரசு சார்பாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மாலை வரை இந்த மாநாடு நடக்க உள்ளது. சுமார் 2.55 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த மாநாடு மூலம் முதலீடு பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு வந்திருக்கும் தலைவர்களை, தொழிலதிபர்களை வரவேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழகம் சிறப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பேச்சில், முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவிலேயே முதலீடு செய்ய மிக எளிதான மாநிலம் தமிழகம்தான். இதுவரை வெளியான தொழில்துறை அறிக்கைகள் அதை நிரூபிக்கிறது. திறமையான தொழிலாளர்களைக் கொண்ட முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
புதிய நிறுவன வசதி
புதிய நிறுவனம் தொடங்க தமிழகம் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தொழில் தொடங்க அனுமதி பெறும் நடைமுறைகள் தமிழகத்தில் எளிதாக்கப்பட்டு இருக்கிறது.தமிழகம் சிறந்த கல்வியின் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்கி வருகிறது. தொழில் தொடங்க வசதியாக இங்கு மிகை மின்சாரம் கிடைக்கிறது.
அதிகம் கவரும்
இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம். அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் உள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் தமிழகத்தில் தொழில்வளர்ச்சி அதிகமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.
அதிகம் ஆனது
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தொழில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு நடத்தி வரும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வரவேற்பு அதிகம் ஆகியுள்ளது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது, அதில் 98 திட்டங்கள் ஒப்பந்தம் போடப்பட்டன, என்று தமிழக முதல்வர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.