ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹீல் ரமாணியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு
Recommended Video
சென்னை: மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹீல் ரமாணியுடன் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து பேசினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே. தஹீல் ரமாணி இவரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேகாலயா மாநில இடம் மாற்றம் செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் குழு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதேபோல் மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது.
ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மீண்டும் பணியில் சேர வேண்டும்.. போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்
கொலீஜியம் நிராகரிப்பு
இந்நிலையில் இந்த இடமாற்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹீல் ரமாணி , உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார். ஆனால், இந்தக் கோரிக்கையை மூத்த நீதிபதிகள் குழு அண்மையில் நிராகரித்தது.
குடியரசுத் தலைவருக்கு கடிதம்
இந்நிலையில் மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தன்னை நியமித்துள்ள கொலிஜியம் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹீல் ரமாணி பதவி விலகுவதாக குடியசுரத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார்.
இன்று போராட்டம்
அவரது கடிதம் ஏற்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹீல் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
நீதிபதியுடன் சந்திப்பு
இந்த சூழலில் ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹீல் ரமாணியுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பேச்சுவார்த்தை கூறிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரவில்லை.
வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
இதனிடையே இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல் ரமாணி முன்பு எந்த வழக்கும் பட்டியலிடப்படவில்லை என பதிவாளர் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்த 75 வழக்குகள் வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.