சட்டசபையில் சண்டமாருதமாய் முழங்கியவர்... எதற்கும் அஞ்சாத கொள்கைச் சிங்கம் ஜெ. அன்பழகன்: வைகோ
சென்னை: சட்டசபையில் சண்டமாருதமாய் முழங்கியவர் ஜெ. அன்பழகன் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மறைவுக்கு வைகோ தெரிவித்துள்ள இரங்கல்:
"ஒன்றிணைவோம் வா" என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விடுத்த அழைப்பினை ஏற்று, உயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும் என்பதை மறைத்து, கொரோனா நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், மலை குலைந்தாலும் நிலை குலையாத மாவீரன் ஜெ.அன்பழகன், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சூரன், தலைவரின் கட்டளை என்றால், கணப் பொழுதில் உயிரையும் பணயம் வைக்கும் உத்தமத் தொண்டன் ஆவார்.
விளையாட்டு... சினிமா... அரசியல்... அனைத்திலும் அப்டேட்டாக இருந்தவர் அன்பழகன்
அஞ்சாதகொள்கை சிங்கம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உயிரான சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள், நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே என்று பகைவர் கூட்டத்தை எச்சரிப்பவர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் சண்டமாருதமாய் முழங்கியவர்.
அன்பழகனின் கணையாழி
அவரது தந்தையார் பழக்கடை ஜெயராமன், சென்னை மாநகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்த முன்னோடிச் செயல்வீரர்களுள் ஒருவர் ஆவார். 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், திரு ஜெ.அன்பழகன் அவர்கள், அன்றைய தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் தளபதி ஸ்டாலின் அவர்களையும், என்னையும் வைத்து, எம்.ஜி.ஆர். நகரில் கொட்டிய மழைக்கு நடுவே பொதுக்கூட்டத்தை நடத்தி, எங்கள் இருவருக்கும் தங்கக் கணையாழி அணிவித்தார்.
மாறா மந்தகாச புன்னகை
மாறாத மந்தகாசப் புன்னகையோடு, மாற்றாரையும் ஈர்க்கின்ற அன்பு தவழும் புன்சிரிப்போடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று இயக்கத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டு, கட்சியின் புகழ் ஓங்குவதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்தியவாறு உயிர் நீத்ததன் மூலம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்றில் அழியாத புகழ் இடத்தைப் பெற்றுவிட்டார் அன்பழகன். இந்தக் கொடுந்துயரைத் தாங்க முடியாமல் தி.மு.கழகத் தலைவர் தவிக்கின்றார். அவருக்கும், அன்பழகன் அவர்களின் குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளுக்கும் ஆறுதல் தேறுதல் கூற முடியாது. இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
|
பிரமாண்ட கூட்டங்கள்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி: தி.மு.க. தலைமை இவரிடம் எத்தகைய பொறுப்பு வழங்கினாலும், குறிப்பாக பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்துவதில் இவருக்கு நிகர் எவருமில்லை. இவரது இறுதி காலத்தில் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வாரி வழங்கியவர். இவரது இறப்பு மிகுந்த வேதனையை தருகிறது.
நம்பிக்கைக்குரிய தளபதி
பதினைந்து வருடம் தென்சென்னை மாவட்ட செயலாளராகவும், மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய ஜே. அன்பழகன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தி.மு.க. தலைமையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்தவர். சோதனையான காலத்தில் உறுதியாக இருந்தவர். இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.
|
விசிக தலைவர் திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன்: திமுக சென்னை. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் காலமான தகவல்மிகுந்த கவலையளிக்கிறது. அவர் கொரோனாவுக்கு இரையாகியுள்ளார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குஎனது ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தவாக தலைவர் வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்: கொரோனா கொடியது, எவரையும் மடியச் செய்வது என்ற வகையில்தான், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகனையும் பழி தீர்த்திருக்கிறது. ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 80% ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் செலுத்தப்பட்டு, உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, அவரது சிறுநீரக, இதயச் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 10) காலை அவர் உயிரிழந்த துயரச் செய்தி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகால தோழமை
மறைந்த ஜெ.அன்பழகன் திமுக சார்பில் 3 முறை எம்எல்ஏவாக வென்றவர். 2001இல் தியாகராய நகர் தொகுதி, 2011இல் மற்றும் 2016இல் சேப்பாக்கம் தொகுதி. அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் திமுக தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பின் என் இதயத்தின் ஆழத்திலிருந்து இரங்கலைத் தெரிவிக்கிறேன். பத்தாண்டு காலம் சட்டமன்றத்தில் அன்பழகனுடன் பணியாற்றிய தோழமையால், பழகுதற்கினிய மாபெரும் அவரது பெருந்தன்மையை உணர்ந்தேன்.
நெஞ்சில் சிறைந்தவர்
அதன் மூலம் மறப்பதற்கிலா அரிய நண்பராக நிரந்தரமாக என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார். ஆறாத் துயரில், மீளாத் துயரில் ஆழ்த்துகின்ற அன்பழகனின் அகால மறைவை எப்படித் தாங்குவது? காலமே காலமே, கொரோனாவே கொரோனாவே, என்ன செய்ய முடியும் உங்களின் பழிவாங்கலுக்கு? பத்தாண்டு கால சட்டமன்றத் தோழமை, பழகுதற்கினிய மாபெரும் பெருந்தன்மை, மறப்பதற்கிலா அரிய நண்பர் ஜெ.அன்பழகனின் மறைவு ஆறாத் துயரில் ஆழ்த்துகிறது! இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.