கொங்கு நாடு: கொல்லைப்புறமாக நுழைய பாஜக முயற்சி.. சி.பி.எம். பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. முத்தரசன் கண்டனம்
சென்னை: கொங்கு தனி மாநிலம் உருவாக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சராக எல். முருகன் சில நாட்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். எல். முருகன் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கொங்கு நாடு, தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது.
நாட்டிலேயே தடுப்பூசி செலுத்துவதில் டாப் 5 மாநிலங்கள்... மோசமான 5 மாநிலங்கள்.. பட்டியல்
கொங்கு நாடு என ஒரு மாவட்டமே இல்லாத நிலையில் மத்திய அரசு அப்படி குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது. கொங்கு நாடு தனி மாநிலத்தை மத்திய அரசு உருவாக்க முயற்சிக்கிறதா? என்கிற சந்தேகமும் எழுந்தது.

சி.பி.எம். பாலகிருஷ்ணன்
தமிழக பாஜக தலைவர்கள் கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை ஆதரித்து பேசி வருகின்றனர். பாஜகவின் இந்த முயற்சிக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளதாவது: பாஜக தமிழ்நாட்டை துண்டாடுவதன் மூலம் கொல்லைப்புறமாக அதிகாரத்தை சுவைக்கலாம் என்று நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒன்றுபட்டு முறியடிப்போம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் நிலைமை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா. முத்தரசன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 370-ன் மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தும், 35 ஏ பிரிவில் வழங்கப்படிருந்த உரிமைகளையும் 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் பறித்ததை நாடு மறந்துவிடவில்லை. ஒன்றுபட்ட ஜம்மு - காஷ்மீர் மூன்றாக உடைக்கப்பட்டதால் அங்கு அமைதியற்ற நிலை தொடர்கிறது.

தமிழகத்தை பிளவுபடுத்த திட்டமா?
இதே வழிமுறையில் தமிழ்நாட்டை பிளவு படுத்த பா.ஜ.க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்தச் செய்தி உண்மையானால் அது ஆபத்தான பாரதூர விளைவுகள் கொண்டதாகும். இந்த பிளவுவாத சிந்தனையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க ஒன்றிய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

பாஜக மீது சந்தேகம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியைத் தடுக்க, பா.ஜ.கவும், அதன் பரிவாரங்களும் தி.மு.க மீதும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான அரசியல் தாக்குதல் நடத்தி வந்தன. ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவின் பகை வளர்க்கும் அரசியலை உணர்ந்த மக்கள் பா.ஜ.க அங்கம் வகித்த கூட்டணியை நிராகரித்தனர். தற்போது பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் மேற்கு மாவட்டங்களை குறி வைத்து பிளவுவாத அரசியல் கருத்துக்களை பரப்புகிறதோ என்ற ஆழமான சந்தேகம் எழுகிறது.

ஒன்றுபட்டு முறியடிப்போம்
இப்பகுதியில் அமைதியாகவும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் மக்களிடம் வெறுப்பு மற்றும் பகை அரசியலை வளர்ப்பதற்கு "கொங்கு நாடு" என்ற விஷ விதை தூவும் ஒன்றிய அரசின் திட்டம் புலி வால் பிடித்த கதையாக முடியும் என்பதை எச்சரிக்கிறோம். முக்கிய உற்பத்தித் தொழில்களும், செழிப்பான விவசாயமும் உள்ள இப்பகுதியில் அமைதி சீர்குலைந்தால் எண்ணிப்பார்ககவும் முடியாத இழப்புகள் ஏற்பட்டுவிடும். இதனை மேற்கு மாவட்ட மக்களும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு பெருமக்களும் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜ.க ஒன்றிய அரசு திட்மிட்டுள்ள விஷம விளையாட்டை, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கட்சி அரசியல் எல்லைகளைக் கடந்து, ஒரணியாக திரண்டு முறியடிக்க முன் வர வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.