தமிழ்நாடு ஊரடங்கில் வந்தாச்சு தளர்வுகள்.. இ-பதிவு யாருக்கெல்லாம் அவசியம்? முழு விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் அதே நேரத்தில் கூடுதலாக சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் குறைவாகவும், பிற 27 மாவட்டங்களுக்கு, சலூன்கள் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் அதிகமாகவும் தரப்பட்டுள்ளது.
குறிப்பாக 11 மாவட்டங்களிலும், இ-பதிவு யாருக்கெல்லாம் அவசியம் என்பது குறித்தும் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு லாக்டவுன்: இ பதிவு.. சலூன்கள்.. போக்குவரத்து.. இந்த 10 விஷயங்கள் ரொம்ப முக்கியம் மக்களே!
11 மாவட்டங்களில் கட்டாயம்
நோய்த் தொற்றுப் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் பிளம்பர் உட்பட சுய தொழில் புரிபவர்கள் வெளியே செல்ல அனுமதி தரப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு இ-பதிவு கட்டாயம்.
இ-பதிவு அவசியம்
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளம்பர்கள்
மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று ரிப்பேர் செய்ய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவார்கள். ஆனாலும், இந்த வகை கடைகளை திறக்க அனுமதி கிடையாது.
வாகனங்களில் பயணம்
வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவு செய்து பயணிக்கலாம். வாடகை டாக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும். இதெல்லாம் 11 மாவட்டங்களுக்கான இ-பதிவு நடைமுறை.
இனி பைக்கிலும் போகலாம்
அதே நேரம், தளர்வுகள் அதிகம் தரப்பட்டுள்ள இதர 27 மாவட்டங்களில் யாருக்கு 'இ-பதிவு' கட்டாயம்? அதுகுறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 11 மாவட்டங்களுக்கு அறிவித்துள்ள இ-பதிவு இந்த மாவட்டங்களுக்கும் பொருந்தும். அதேநேரம், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் செல்லலாம். ஆனால், இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்.
இ-பதிவு செய்வது எப்படி
ஐடி கம்பெனிகள் 20 சதவீத பணியாளர்கள் அல்லது 10 நபர்கள், இதில் எது அதிகமோ அந்த அளவு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவார்கள். மக்கள் இ-பதிவு செய்ய, https://eregister.tnega.org/#/user/pass என்ற வெப்சைட்டை அணுகவும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.