லோக் ஆயுக்தா தலைவர் நீதிபதி தேவதாஸ்... 2015ம் ஆண்டு வழங்கிய மறக்க முடியாத தீர்ப்பு
சென்னை: தமிழக லோக் ஆயுக்தா நடுவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி தேவதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது பரபரப்பான பல தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி தேவதாஸ், கடந்த 2014ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழத்தில் நடந்த விழாவில் பேசுகையில், சட்டங்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
நீதிமன்றம் கோயில் போன்றது என்றும் இரு தரப்பினரும் ஏற்று கொள்ளும் வகையில் நிறைவான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் கடந்த 2016ம் ஆண்டு அருப்புக்கோட்டையில் நடந்த நீதிமன்ற திறப்பு விழாவில் தெரிவித்து இருக்கிறார். இதேபோல் இவர் வழங்கிய வித்தியாசமான தீர்ப்புகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
சமரசம் செய்ய உத்தரவு
கடலூர் மாவட்டத்தில், 15வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், சம்பந்தப்பட்ட இருவரும் சமரச மையத்துக்குப் போய் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று கடந்த 2015ம் ஆண்டு உத்தரவிட்டார்.
தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமனம்
சிறுமி பாதிப்பு
நீதிபதி தேவதாஸ் தனது தீர்ப்பில் , ‘‘இந்த வழக்கைப் பொறுத்த வரை அப்பாவியான சிறுமியும், அவரது பெண் குழந்தையும் பெரிய கேள்விக்குறியாக உள்ளனர். பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு அதற்கான வழியினை வகுத்துள்ளது.
மாற்று தீர்வு
இருப்பினும், நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை மிகவும் வருந்தத்தக்க அளவிலேயே உள்ளது. அவர்களுக்கு நியாயமான அதிகாரத்தை வழங்குவதன் மூலமே பெண்களிடம் முன்னேற்றத்தைக் காண முடியும். ஆண்களிடம் இருந்து கருணையை எதிர்பார்க்கவில்லை. சம வாய்ப்பைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். காலம், செலவு போன்றவற்றை கணக்கில் கொண்டுதான் மாற்று முறை தீர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
குற்றவாளிக்கு ஜாமின்
குற்ற வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகளில்கூட சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெண் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கில் சமரச தீர்வு காண முயற்சிக்கலாம். அதற்கு குற்றவாளி சிறையில் இருந்தால் சரியாக இருக்காது. எனவே, குற்றவாளி மோகனுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்படுகிறது. சமரச மையத்தின் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்." இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு
இந்த உத்தரவு, யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பிறகு சமரசம் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற தவறான முன் உதாரணம் என்று பலர் கருத்து தெரிவித்தனர். இதனால் நீதிபதி தேவதாஸ், பாலியல் வன்கொடுமை வழக்கில் சமரசம் செய்துகொள்ளுமாறு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றார்.
பலாத்கார வழக்கு
பாலியல் பலாத்காரம் செய்தவரே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ததால் விடுதலை செய்து நீதிபதி தேவதாஸ் கடந்த 2015ம் ஆண்டு உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில், "இவ்வழக்கில் தண்டனை பெற்ற மனோகரனை மன்னித்து கணவராக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாக அந்தப் பெண்ணே தெரிவித்துள்ளார்.
கணவரான குற்றவாளி
எனவே மனைவி மற்றும் குழந்தையின் மகிழ்ச்சியை பாதிக்கும் வகையில் மனோகரனை சிறைக்கு அனுப்புவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இவ்வழக்கைப் பொறுத்தவரை மனோகரன் அனுபவித்த சிறை தண்டனையே போதுமானது. அதனால் அவருக்கான தண்டனை குறைக்கப்படுகிறது. அவரது பெற்றோர் மற்றும் சுப்பிரமணியனை விடுதலை செய்கிறேன்". இவ்வாறு கூறியிருந்தார்.