சுப்பிரமணியன் சுவாமி குறித்து நிருபர்கள் கேள்வி.. அமைச்சர் அன்பில் மகேஷின் நச் பதில் இதுதான்!
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!
கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டன.
பிளஸ் 2 தேர்வும் ரத்து
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும். பிளஸ் 2 தேர்வையும் அதிரடியாக ரத்து செய்தது தமிழ்நாடு அரசு. பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு முடிவு செய்வது? என்பதற்காக ஒரு தனி குழுவையும் தமிழநாடு அரசு அமைத்துள்ளது. மாநில கல்வி திட்ட அடிப்படியில்தான் உயர் படிப்புகளின் சேர்க்கையும் நடைபெறும் என்று அரசு கூறியுள்ளது.
பள்ளிகள் தீர்ப்பு எப்போது?
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் முழுமையாக இயங்கவில்லை. இடையில் சிறிது காலம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டும் வகுப்புகள் நடைபெற்றன. தற்போது கொரோனா குறைந்து வருவதாலும், புதிய கல்வியாண்டு தொடங்கி விட்டதாலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்று பொதுமக்கள் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.
கமிட்டி அமைப்பு
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கரூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளிடம் கல்வி கட்டணமாக நீதிமன்றம் உத்தரவிட்ட 75 சதவீதம் கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். உயர்கல்வி சேர்க்கைக்கான பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து நாளை முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. பள்ளி கட்டணம் குறித்து நீதிமன்றம் உத்தரவு படி இந்தாணடு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும். நீட் தேர்வுவை பொறுத்தவரை ஏ.கே ராஜன் கமிட்டி அடிப்படையில் நீட் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
சுப்பிரமணியன் சுவாமி பற்றி கருத்து
அப்போது ''பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாடு அரசு தொடர்பாக சில கருத்துக்கள் கூறியுள்ளார். அதைபற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று நிருபர்கள் அமைச்சரிடம் கேட்டனர்.
இதற்கு பதில் கூறிய அன்பில் மகேஷ், ' அவரைப் பற்றி பேச ஒன்றுமில்லை. பள்ளிகளில் தவறு நடந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை அந்த பள்ளியில் நடந்த தவறுகளை வெளிக்காட்டிவிட்டோம். இப்போது இந்த வழக்கு போலீஸ் துறை வசம் சென்று விட்டது. போலீஸ் துறையை கவனிக்கும் முதல்வர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்' என்று தெரிவித்தார்.