சீன ஆப்களுக்கு தடை-புதிய செயலிகளை உருவாக்க தமிழக ஐடி நிறுவனங்களுக்கு அமைச்சர் வேலுமணி அப்பீல்
சென்னை: சீனாவின் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய செயலிகளை தமிழக ஐடி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி யோசனை தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் எல்லை பிரச்சனை நீடித்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக், ஹலோ போன்ற சமூக வலைதளங்கள் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் செயல்பட மத்திய அரசு முழுமையாக தடை விதித்தது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரில் அந்த செயலிகள் காலாவதியாகிவிட்டது.
பல மாதங்கள் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்திய கோடிக்கணக்கான இந்தியர்கள், இப்போது அதே போன்று பயன்படுத்துவதற்கு எளிமையான சமூக வலைதள செயலிகளுக்காக காத்திருக்கின்றனர். இந்த சூழலில் தற்சார்பு பொருளாதார கொள்கையை உயர்த்தும் வகையில் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.
புதிய சமூக வலைதள செயலிகளுக்கான தேவை உருவாகியுள்ள இந்த காலகட்டத்தில், தகவல் தொழில் நுட்ப துறையினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்தப் பதிவில், 59 சீன செயலிகள் மீதான மத்திய அரசின் தடை, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய மற்றும் புத்தாக்க செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு சரியான வாய்ப்பு என்று கருதுகிறேன். கோவை உள்ளிட்ட தொழில்நுட்ப நகரங்களில் உள்ள தொழில் முனைவோர் இதை பயன்படுத்தி தொழில் நுட்ப வேலைகளை பெரிய அளவில் உருவாக்கிட வேண்டும் என்று தகவல் தொழில் நுட்ப துறையினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாழ வாய்ப்பில்லை என்று சொன்ன டாக்டர்கள்.. 61 நாட்கள் கொரோனா உடன் போராடி வீடு திரும்பும் கணவன்
Recommended Video
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பயணிக்க காத்திருக்கும் இந்திய இளைய தலைமுறையினரின் ஆவலை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இந்திய சமூக வலைதள விரும்பிகள் மீண்டும் அயல்நாட்டு சமூக வலைதளங்களை நாடாமல் இருக்க, உள்நாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தொழில் வளத்தை பெருக்கி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விடுத்துள்ள கோரிக்கை தமிழக தொழில் முனைவோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.