என் மகனா?.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்!
தவறான பரவிய வதந்தி குறித்து சிவி சண்முகம் புகார் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "நவீன் என் மகனே கிடையாது.. இப்படி வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அமைச்சர் சிவி சண்முகம் அளித்திருந்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இணையத்தில் தவறான வதந்தி பரப்பிய அமமுக பிரமுகர் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நேற்று விடிகாலை, நீலாங்கரை சாலையில் கார் ஒன்று தறிகெட்டு வேகமாக வந்து சாலையோரம் இருந்த ஆட்டோவில் மோதியது.
பிறகு அங்கிருந்த சுவற்றில் மோதி நொறுங்கியது. இதை பார்த்து பதறி அடித்து சென்ற போலீசார், காருக்குள் எட்டி பார்த்தனர். அப்போது ஒரு இளைஞர் காரிலிருந்து இறங்கி வந்து போலீசாரை தகாத வார்த்தையில் திட்டினார்.
தகவல்கள்
இப்படி போலீசிடம் தகராறு செய்த அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மதுபோதையில் இளைஞர் இருந்ததால் அவர் குறித்த தகவல்களை உடனடியாக போலீசாரால் பெறமுடியவில்லை. போதை தெளிந்து பின்னர் நடத்திய விசாரணையில்தான், அவரது பெயர் நவீன் என்பதும், சொந்த ஊர் மதுரை மாவட்டம் விளாங்குடி என்பதும் தெரியவந்தது.
தொழிலதிபர்
மேலும் அவர் ஒரு தொழிலதிபர் என்றும் விவரங்கள் வெளிவந்தன. இதையடுத்து, அவரை போலீசாரும் கைது செய்துவிட்டனர். ஆனால், நவீன் குறித்த உண்மை தகவல்கள் வெளிவரும் முன்னரேயே, அவர் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் மகன் என்ற தகவல்கள் பரவியது. இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வீடியோ பலருக்கும் ஷேர் செய்யப்பட்டது.
புகார்
இந்த தகவல் அமைச்சரின் காதுகளுக்கு எட்டியது. இதையடுத்து தனது வழக்கறிஞரை அழைத்து கொண்டு சென்னை கமிஷனரை அமைச்சர் நேரில் சந்தித்தார். இப்படி தவறாக வதந்தி பரப்பியவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமிஷனரிடம் அமைச்சர் புகார் தந்தார்.
ஜெயசிம்மன்
சி.வி.சண்முகத்தின் மகன் ஜெயசிம்மன் இப்போதுதான் பிளஸ் டூ முடித்துவிட்டு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கவுன்சிலிங்குக்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமமுக பிரமுகர்
அமைச்சர் அளித்த இந்த புகாரின் பேரில் போலீஸ் தரப்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட வீடியோவை இணையத்தில் பரப்பி, அமைச்சரின் பெயருக்கும் நற்களங்கம் ஏற்படுத்தியது அமமுக பிரமுகர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார் இருபிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் யார்? எதற்காக இப்படி வதந்தியை பரப்பினார், வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பதெல்லாம் இனிதான் விசாரணையில் தெரியவரும்.