அதிமுக அரசிடம் குவாரி உரிமம் பெற்ற துரைமுருகன் மருமகள்... ஜல்லி உடைத்த சிவி சண்முகம்- திகுதிகு திமுக
சென்னை: அதிமுக அரசிடம் 2 மாதங்களுக்கு முன்னர் மருமகள் பெயரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குவாரி உரிமம் பெற்றதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அறிக்கையால் திமுகவில் துரைமுருகனுக்கு எதிராக்க மீண்டும் புகைச்சல் கிளம்பியுள்ளது.
திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன், பேராசிரியர் க. அன்பழகன் மறைவால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் திமுக பொருளாளர் பதவியை துரைமுருகனும் ராஜினாமா செய்தார்.
மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் தனி நுழைவுத் தேர்வு எனில் நீட்டை ரத்து செய்ய வேண்டும்: ஸ்டாலின்
பரிதவித்த துரைமுருகன்
ஆனால் கொரோனா பரவல் லாக்டவுனால் துரைமுருகன் உடனடியாக பொதுச்செயலாளராக முடியாமல் போனது. பொருளாளர் பதவியும் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியும் இல்லாமல் பரிதவித்துப் போனார் துரைமுருகன். ஒருகட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் வரை பொருளாளராக துரைமுருகன் இருப்பார் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.
ஸ்டாலினின் குமுறல்
இதனால் அதிர்ச்சி அடைந்து போன துரைமுருகன், ஸ்டாலினிடம் புலம்பினார். அப்போதே, அதிமுக அரசுடன் நீங்கள் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்கிற விவரங்களை சுட்டிக்காட்டி ஆதங்கத்தை கொட்டினார் ஸ்டாலின். பின்னர் ஒருவழியாக திமுக பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் துரைமுருகன். ஆனால் அவரை சுற்றிய சந்தேக வளையம் அகலாமல் இருந்தது.
சிவி சண்முகத்துக்கு எதிராக அறிக்கை
இதன் உச்சமாக துரைமுருகன் அதிமுகவுக்கு தாவுகிறார் என்கிற வதந்தி பரவியது. இதில் கடுப்பாகிப் போன துரைமுருகன் வழக்கம் போல கண்ணீர் கசிந்துருக விளக்கம் தந்தார். இந்த நிலையில் குவாரி ஒதுக்கீடு விவகாரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதில் அளித்து சி.வி.சண்முகமும் மற்றொரு அறிக்கை வெளியிட்டார்.
மருமகளுக்கு உரிமம் பெற்ற துரைமுருகன்
அந்த அறிக்கையில், 2 மாதங்களுக்கு முன்னர் மருமகள் பெயரில் துரைமுருகன், குவாரி உரிமம் பெற்றிருக்கிறாரே... அவரை ராஜினாமா செய்ய சொல்வீர்களா? என எதிர்கேள்வி கேட்டிருந்தார் சி.வி. சண்முகம். அதிமுக அரசுடன் மிக மிக நெருக்கமாக இருக்கிறார் துரைமுருகன் என்பதை அப்பட்டமாக ஜல்லி ஜல்லியாக போட்டு உடைத்துவிட்டார் சி.வி.சண்முகம். இதுதான் இப்போது திமுகவில் துரைமுருகனுக்கு எதிரான புகைச்சலுக்கு காரணமாகிவிட்டது.