ஒரே அறிவிப்பில் ஸ்கோர் செய்த முதல்வர் ஸ்டாலின்.. தீபாவளி போனஸ் அறிவிப்பு.. வந்தது உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: 10 வருடம் கழித்து ஆட்சியை பிடித்துள்ள திமுக அரசு, இந்த முறை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை வழங்குமா? எப்போது வழங்கும்? எவ்வளவு வழங்கும்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது
தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு போனஸ் எப்போது? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.
2018, 2019-ல், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் உட்பட கருணைதொகை 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது... நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது.
தீபாவளி : யம தீபம் ஏற்றினால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் - திருமணத் தடை நீக்கும்
லாக்டவுன்
ஆனால், கடந்த 2 வருடமாகவே கொரோனாவைரஸ் பரவல் தமிழக மக்களை நிலைகுலைய வைத்துவிட்டது.. லாக்டவுன் போட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் ஏற்பட்டுவிட்டது.. மொத்தமாகவே தொழில்கள் முடங்கின.. பல நிறுவனங்கள் மூடப்பட்டே இருந்தன.. பொருளாதார பிரச்சனை தலைதூக்கியது.. அதனால், அதிகபட்சமாக 10 சதவீதம் போனஸ் தான் தரப்பட்டது..
நடவடிக்கை
இந்த முறை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. எடப்பாடி தலைமையிலான நான்கரை வருட அதிமுக ஆட்சியில் முதல் 2 வருடங்கள் தாராளமாக போனஸ் தரப்பட்டது.. அடுத்த 2 வருடங்கள் கொரோனா காரணம் காட்டப்பட்டு சதவீத அடிப்படையிலும் போனஸ் குறைக்கப்பட்டது.. இப்போது, 10 வருடம் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்க போகிறார்? எவ்வளவு போனஸ் வழங்க போகிறார்? என்பது மிகப்பெரிய ஆர்வமாக இருந்தது.
நிதி நெருக்கடி
கஜானா காலியாக இருந்த நிலையில், ஏகப்பட்ட நிதி நெருக்கடியில்தான் இந்த திமுக ஆட்சி துவங்கியது என்றாலும், போனஸ் விஷயத்தில் எந்த அளவுக்கு தாராளம் காட்டும் என்பது தெரியாமல் இருந்தது. அதேசமயம், இந்த முறையும் கொரோனா காரணம் காட்டப்படுமானால், அது நிச்சயம் அரசு ஊழியர்கள் தரப்பில் அதிருப்தியை பெற்று தரக்கூடும் என்றும் கருத்துக்கள் எழுந்தன. காரணம், பல முக்கிய தொழிற்சங்கங்கள் திமுகவையும், அதன் கூட்டணி கட்சியையும்தான் சார்ந்துள்ளது.. அதுமட்டுமல்ல, நகைக்கடன் தள்ளுபடி மற்றும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு வாக்குறுதிகளை இன்னும் செயல்படுத்த முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது.
அதிருப்தி
எதிர்க்கட்சிகள் இதை ஒரு விமர்சனமாகவே முன்வைத்தும் வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில் போனஸ் விஷயத்தில் தாராளம் காட்டி, நிலவிவரும் அதிருப்தியை முதல்வர் ஸ்டாலின் சரிசெய்யக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.. வழக்கமாக, அரசு ஊழியர்கள் என்றாலே, திமுக அரசு அள்ளி அள்ளி தரும் அளவுக்கு சலுகைகளை தாராளமாக காட்டும்.. இந்த முறை நிதிநிலை சீர்கெட்டு போயுள்ள நிலையில், போனஸ் குறித்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது..
நம்பிக்கை
இதனிடையே, மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அவரிடமும் போனஸ் குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர், "இன்றைக்கு உள்ள நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் உள்ள அமைச்சர்கள் முதல்வருடன் பேசி சூழலுக்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும்" என்றார். போனஸ் இல்லை என்று அமைச்சர் சொல்லாமல், போனஸ் அறிவிக்கப்படும் என்று சொன்னதே பெருத்த நம்பிக்கையை அரசு ஊழியர்களிடையே கூட்டி வந்தது.
அறிவிப்பு
இந்நிலையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2012-ன் படி போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21000 என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை தொகை கீழ்கண்டவாறு வழங்கப்படும்.
போனஸ்
லாபம் ஈட்டியுள்ள / நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும்.
முதல்வர்
இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8400 பெறுவர். மொத்தத்தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,87,250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.