7.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம்: அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நீட் தேர்வால் பாதிக்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநர் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் இன்னமும் ஒப்புதல் தரவில்லை. இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதமாகி வருகிறது.
7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை- ஆளுநர்
ஆளுநர் கோரும் அவகாசம்
இந்த மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு, அரசியல் கட்சிகளின் கோரிக்கை. ஆனால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க இன்னும் 4 வார கால அவகாசம் தேவை என்பது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிலைப்பாடு.
திமுகவின் போராட்டம்
இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் பன்வாரிலால் கூறியிருக்கிறார். இதனிடையே ஆளுநர் ஒப்புதல் தராமல் தாமதிப்பதைக் கண்டித்து திமுக நாளை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறது.
அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அப்போது, 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் அமைச்சர்கள் நாங்கள் நேரில் வலியுறுத்தினோம். ஆளுநருக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்தோம்.
ஒப்புதல் தருவார் என நம்பிக்கை
அதேநேரத்தில் ஆளுநரை நாம் கட்டாயப்படுத்தவும் முடியாது. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எங்களிடம் தெரிவித்த கருத்துகளையும் வெளியில் கூற முடியாது. ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.