3-வது அலை வந்தாலும் டோன்ட் வொரி.. வலுவான கட்டமைப்புடன் நாம் ரெடி. நம்பிக்கை கொடுக்கும் மா.சு!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலை வந்தாலும் அதனை சமாளிக்கும் போதிய கட்டமைப்புகள் உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களாக ஆட்டம் போட்ட கொரோனா தொற்று தற்போது குறைய தொடங்கி விட்டது. சில வாரங்களுக்கு முன்பு தினமும் 36,000-க்கும் மேல் சென்ற கொரோனா தொற்று தற்போது 12,000-க்குள் குறைந்து விட்டது.
தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால் மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா குறைய, குறைய கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மீண்டு(ம்) வரும் தலைநகர்.. 4ஆவது நாளாக 1000க்கு கீழ் கொரோனா பாதிப்பு.. பாசிடிவ் விகிதமும் மிக குறைவு
மா.சுப்பிரமணியன் பேட்டி
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1.30 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள, ஒருநிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:-
சிறப்பு சிகிச்சை வார்டு
கொரோனா தொற்று 3-வது அலை வந்தாலும் அதைச் சமாளிக்க போதிய கட்டமைப்புகள் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. கருப்பு பூஞ்சை நோய்க்கும் தனி கவனம் செலுத்தி சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 1,737 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சைக்கான சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் எண்ணிக்கை?
தமிழ்நாட்டுக்கு இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 41,030 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில்1 கோடியே 5 லட்சத்து 97,418 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் 6 லட்சத்து 16,660தடுப்பூசிகள் ஹைதராபாத், புனேவில் இருந்து வந்துள்ளன. இந்த தடுப்பூசிகளை மாவட்ட வாரியாக அனுப்பும் பணி நடந்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படவில்லை.
முதல்வர் உத்தரவு
வைரஸ் தொற்றால் தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைக்குத்தான் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு தாய்-தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கருணை அடிப்படையில் நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.