இன்னும் 2 மாசம்தான்.. 'குட்கா' புகையிலை பொருட்களை முழுமையாக ஒழிச்சிடலாம்.. அமைச்சர் மா.சு உறுதி!
சென்னை: இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களை கட்டுப்படுத்த முழு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தமிழ்நாட்டை புகையிலை, குட்கா இல்லாத மாநிலமாக உருவாக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காவல்துறை, வணிகர் சங்கம் , மருத்துவத்துறை என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
புதையல் ஆசை.. ஜோதிடர் பேச்சை நம்பி.. வீட்டுக்குள் 20 அடி குழி தோண்டிய கும்பல்.. 3 பேரை அள்ளிய போலீஸ்
''புகையிலை இல்லா மாநிலம் தமிழ்நாடு'' என்று உருவாக நாம் ஒன்றிணைவது அவசியம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
புகையிலை பொருட்கள் விற்பனை
தமிழ்நாட்டில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் இதனை தடுக்க மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்த கடைகளிலும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியபட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு முதல் முறை நோட்டீஸ் வழங்கப்படும்.
வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு
இரண்டாவது முறை அபராதம் விதிக்கப்படும். இதனையும் மீறி விதிமீறல் தொடர்ந்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புகையிலை விற்பனையை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் வியாபாரிகளை ஒன்றிணைத்து உறுதிமொழியை எடுக்க வைக்கவேண்டும். மாணவர்கள் மத்தியில் புகையிலை பழக்கம் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பாராட்டு சான்றிதழ்
எனவே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஆங்காங்கே மாவட்டத்திற்கு 50 இடங்களில் நிரந்தரமாக கண்காணிப்பு குழுக்களை அமைக்க முடிவு செய்யப்ட்டுள்ளது. புகையிலை ஒழிப்பு தினத்தன்று முழுமையாக புகையிலை ஒழிப்பு செய்த மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலமாக பாரட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
விழிப்புணர்வு வாசகங்கள்
மாணவர்கள் பயன்டுத்தும் நோட்டு புத்தகங்களில் புகையிலை தொடர்பான நிறுவனங்களின் பெயர் இருந்தால் அதை தவிர்த்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற வழிவகை செய்யப்படும். இன்னும் இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் புகையிலை குட்கா பொருட்களை கட்டுபடுத்த முழு நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரயில் மூலம் புகையிலை பொருட்கள் கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் தெரிவிக்கலாம்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்யபவர்கள், கடத்துபவர்கள் குறித்து 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் அனுப்பலாம். புகார் அளிப்பவர்கள் விபரம் வெளியே தெரிவிக்கப்படாது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி 2கோடி என்ற இலக்கை இன்று எட்டியுள்ளது. இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.