இத மட்டும் சொல்லிட்டு விஜய் ரோட்டுல நடந்து போகட்டும் பார்க்கலாம்... ஓ.எஸ்.மணியன் சவால்!
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த இலவச திட்டங்களை நடிகர் விஜய் கொச்சைபடுத்தியுள்ளதாக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
சர்கார் படத்தின் காட்சிகள் ஒரு கட்சியை மட்டும் சாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த திரைப்படத்தில் அரசு கொடுத்த இலவசப் பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை எரிப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசின் திட்டங்களை அவமானப்படுத்தும் இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்கங்கள் முன்பு பேனர் கிழிப்பு, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
[நள்ளிரவில் வந்து போலீஸ் வீட்டுக் கதவை தட்டியது.. ஏ.ஆர்.முருகதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு]
எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்கள்
அதிமுக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, அன்பழகன்,ஜெயக்குமார் உள்ளிட்டோரம் சர்கார் திரைப்படக் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் சர்கார் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
விஜய் கொச்சைப்படுத்திவிட்டார்
இந்நிலையில் சர்கார் பட விவகாரம் குறித்து திருத்தணியில் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், ஜெயலலிதா கொண்டு வந்த இலவச திட்டத்தை நடிகர் விஜய் கொச்சைப்படுத்திவிட்டதாக தெரிவித்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் விலையில்லா திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்றார். அப்படிப்பட்ட திட்டத்தை விஜய் கொச்சைப்படுத்தியுள்ளார்.
சொல்லிவிட்டு நடந்து போய்விடுவாரா
விலையில்லாமல் வழங்கப்படும் தரமான 20 கிலோ அரிசியை வழங்க வேண்டாம் என்று சொல்கிறார் விஜய். அப்படி வழங்குவது தவறு என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டு வீதிகளில் அவர் நடந்து விடுவாரா.
இதை மட்டும் செய்யுங்க பார்க்கலாம்
திரைப்படத்தில் வசனங்களாக பேசாமல் நிஜத்தில் இப்படியான கருத்துகளை அவர் தெரிவிக்க வேண்டும். அப்படி சொல்லிவிட்டு வீதியில் இறங்கி நடந்துவிடுவார் என்றால் நான் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.