நல்ல ஆம்பளையா இருந்தா என் ஊருக்கு வா.. என்ன மிரட்டுறே, ஸ்டாலின் மீது ராஜேந்திர பாலாஜி ஷாக் பாய்ச்சல்
ஸ்டாலினை ஒருமையில் விமர்சித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சென்னை: "உங்க வீட்டுக்கு புட்டபர்த்தி சாய்பாபா வந்தப்போ, உங்க அம்மா தயாளு அம்மாள் சாய்பாபாவிடம் திருநீர் வாங்கினாங்களே.. அப்படியே மடிப்பிச்சை போல் வாங்கினாங்களே.. இப்போ என்ன பேசுறீங்க... நாத்திகன் என்றால் கோயிலுக்கு போகாதே.. பள்ளிவாசல், சர்ச்சுக்கு போகாதே" என்று மிகவும் கீழ்த்தரமாக, ஒருமையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ராஜேந்திர பாலாஜி சர்ச்சையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.. வழக்கமாக அவர் பேசுவது சற்று காட்டமாக இருந்தாலும், நேற்றுதான் திமுக தலைவரை ஒருமையில் திட்டினார்.. ஆபாசமாக பேசினார்.. அமைச்சர் என்பதையும் மறந்துபோய், தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியது, திமுக தரப்புக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்போது அமைச்சர் பேசியது இதுதான்: "இது என்ன பொழப்பு... தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீரை கீழே கொட்டறார்.. ஒரு பள்ளிவாசலுக்கு போனால், நோன்பு கஞ்சி குடிக்க கொடுத்தால், குடிக்கணும்.. குடிக்க மறுத்தால் பள்ளிவாசலுக்கு உள்ளே போகாதே.. சர்ச்சுக்குள்ள ஸ்வீட் கொடுத்தால் அதை சாப்பிடணும்.. பிடிக்கவில்லையா அங்கே போகாதே.
அந்த மாதிரி தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீறு கொடுப்பது வழக்கம். அங்கே தீபாராதனை காட்டி திருநீறு தருவாங்க.. அம்மா புரட்சித்தலைவி அங்கே போயிருக்காங்க.. அவருக்கும்தான் திருநீறு தந்தாங்க. மனசார வாங்கி நெற்றியில் பூசிக்கிட்டாங்களே.. ஸ்டாலினுக்கு பிடிக்கலையா, பக்கத்தில் இருக்கிறவங்ககிட்ட தந்திருக்கலாம்.. இல்லேன்னா திருநிறு பூசுறது எனக்கு வழக்கம் இல்லைன்னாவது சொல்லி இருக்கலாம்.. கேட்டால் கொள்கைன்னு சொல்றார்.. என்ன கொள்கை இருக்கு ஸ்டாலினுக்கு?
உன்னுடைய மனைவி எல்லா கோயிலுக்கும் போறாங்க.. வீட்டில் நவராத்திரி கொலு நடத்துறாங்க.. உன் பெயரில் அர்ச்சனை செய்கிறார்.. நீ மட்டும் அடுத்த சாமி கும்பிட போகாதே., திருநீர் வைக்காதே... குங்குமம் வைக்காதே... நாமம் போடாதே என கிண்டலும், கேலியும் பேசுறே.. உங்கள் வீட்டிற்கு புட்டபர்த்தி சாய்பாபா வரும்போது உங்கள் தாயார் தயாளுஅம்மாள் சாய்பாபாவிடம் திருநீர் வாங்கிக்கிட்டாங்களே.. மடிப்பிச்சை போல் வாங்கினார்.
பக்கத்தில் கலைஞரும்தான் உட்கார்ந்திருந்தார்.. துரைமுருகன் அண்ணாச்சி கூட ஒரு மோதிரம் வாங்கிக் கொண்டார். என்ன பெரிய நாத்திகம் பேசுகிறீங்க... நாத்திகன் என்றால் கோயிலுக்கு போகாதே.. பள்ளிவாசல், சர்ச்சுக்கு போகாதே. இந்து கோயிலுக்கு போகாதே.. எங்காவது ஒரு இடத்துக்கு போறது, அங்க போயி கேவலப்படுத்துறது?
70 வருஷத்துல திருக்குவளையில் உன் சொத்து என்ன? ஓபன் ஸ்டேட்மெண்ட் குடு.. அன்னைக்கு திருட்டு ரயில்ல ஏறி வந்தார் ஐயா.. அன்னைக்கு டிக்கட் 5 ரூபாய்.. 5 ரூபாய் இல்லாம வந்த குடும்பத்துக்கு இப்போ என்ன சொத்து?" என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.