அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்லூர் ராஜு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,26,581 ஆக உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,765 ஆக இருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவிலேயே கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் முதலில் பலியானது தமிழகத்தில்தான். திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனா பாதித்து உயிரிழந்தார்.
அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இன்னமும் சிலர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மீண்டு எழும் சென்னை.. ஸ்பெஷலிஸ்ட் ராதாகிருஷ்ணனின் மாயம்.. தப்பி வரும் தலைநகர்.. சாதித்தது எப்படி?
அண்மையில் அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், தங்கமணிக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
செல்லூர் ராஜுவின் மனைவிக்கு ஏற்கனவே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா உறுதியானது. இதையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லூர் ராஜு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குணமடைய வேண்டுகிறேன்: ஓபிஎஸ்
அமைச்சர் செல்லூர் ராஜு குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) July 10, 2020
இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் பதிவிட்டுள்ளார்.