அணில்கள் மூலம் மின்தடை ஏற்படும்- ராமதாஸுக்கு போட்டோ ஆதாரங்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!
சென்னை: அணில்கள் மூலம் மின்தடை எப்படி ஏற்படும்? என்று கிண்டலடித்திருந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு போட்டோ ஆதாரங்களுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி தந்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த சில நாட்களாக மின்தடை பலநகரங்களில் நீடிக்கிறது. ஆனால் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
என்ன அணில்கள் மூலம் மின்தடை ஏற்படுமா? எப்படி?.. அமைச்சர் செந்தில் பாலாஜி கூற்று உண்மையா.. இதை படிங்க
அணில்கள் காரணம்
இதற்கு பதிலளித்திருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சில இடங்களில் செடிகள் வளர்ந்து கம்பிகளோடு மோதும் போது அதில் அணில்கள் ஓடும். அந்த அணில்கள் ஓடும் போது இரண்டு லைன்கள் ஒன்றாகி மின்சார தடை ஏற்படும் என கூறியிருந்தார்.
விஞ்ஞானமாம்- ராமதாஸ் கிண்டல்
இந்த விளக்கத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கவில்லை. மேலும் தமது ட்விட்டர் பக்கத்தில், மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? எனவும் கிண்டலடித்து பதிவிட்டிருந்தார்.
போட்டோ ஆதாரங்கள்
டாக்டர் ராமதாஸின் இந்த கிண்டலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தமது ட்விட்டர் பக்கத்தில் சில படங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். மின்கம்பங்களில் எப்படி அணில்கள் அமர்ந்திருக்கின்றன; மரக்கிளைகள் எப்படி மின்கம்பங்களில் படர்ந்திருக்கின்றன என்பதை விளக்குவதாக அந்த படங்கள் உள்ளன.
செந்தில் பாலாஜி விளக்கம்
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்
மின்தடையும் அணில்களும்
அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் @drramadoss அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்! அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்!
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவோம்
பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்! என்றும் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.