மரணத்திலும் அரசியலா.. ஜெயலலிதாவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: மரணத்தை கூட வைத்து அரசியல் செய்வது நம்ம ஊர்லதான் நடக்கும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் அதிமுகவினரையே அயர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"அம்மா" செத்து போய் 2 வருஷம் ஆச்சு... இன்னும் எப்படி இறந்து போனாங்கன்னு நமக்கு தெரியல. அது சம்பந்தமா ஒரு கமிஷனும் நியமித்து விசாரணை போய்க்கிட்டு இருக்கு. அந்த விசாரணையும் இன்னும் கொஞ்ச நாளில் முடிவுக்கு வர உள்ளது.
ஆனால் இந்த மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷனே அமைதி காத்து வரும்போது, தமிழக அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
விஜயபாஸ்கர்
முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்தான். "அம்மா இட்லியும் சாப்பிடல, சட்னியும் சாப்பிடல, எல்லாமே பொய். உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறோம்" என்றார். பிறகு ஒருமுறை விஜயபாஸ்கர், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஒரு விசாரணை என்றால் அதில் முதல் நபராக விசாரிக்கப்படுபவர் ஓ.பன்னீர்செல்வமாகத்தான் இருக்கும்.
சிகிச்சை தரவில்லை
அனைத்து சிகிச்சைகளையும் பற்றி பொறுப்பு முதல்வராக இருந்த நன்கு அறிந்தவராக இருந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 19-வது நாளே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தரப்பட்டது. அவருக்குத் தெரியாமல் எந்தவொரு சிகிச்சையும் ஜெயலலிதாவுக்கு தரப்படவில்லை." என்றார்.
சசிகலா குடும்பம்
அடுத்ததாக அப்போலோ ஜெ. சாப்பிட்ட பில் கணக்கை காட்டியதும், கட்சி அவைதலைவர் மதுசூதனன், "75 நாளும் ஆஸ்பத்திரியில் இருந்தேன், என்னை ஒருநாளும் அம்மாவை பாக்க விடல, ஒரு கோடி ரூபாய்க்கு சசிகலா குடும்பம்தான் சாப்பிட்டிருக்கும்" என்றார்.
மரணத்தில் சந்தேகம்
இதற்கு பிறகு பேட்டி அளித்த சட்ட அமைச்சர் சிவி சண்முகம், "அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்யவேண்டாம் என சொன்னது யார்? ஒருவேளை சிகிச்சை தந்திருந்தால் அம்மாவை பிழைக்க வைத்திருக்கலாம்? மரணத்தில் சந்தேகம் உறுதி" என்றார். அன்றைய தினமே ஜெயக்குமாரும், "ஆமாம்.. சசிகலா குடும்பம்தான் சாப்பிட்டது, எங்களை பார்க்க யாரையுமே உள்ளே விடவில்லை" என்றார்.
சொந்த கருத்து
இப்போது, இதுசம்பந்தமாக துணை முதல்வர் வாய் திறந்திருக்கிறார். அமைச்சர் சிவி சண்முகம் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு "அமைச்சர் கூறியதை அவரது சொந்த கருத்தாக பார்க்கிறேன்" என்று பதிலளித்தார்.
ஓபிஎஸ்
மரணம் சம்பந்தமாக முதல் ஆளாக விசாரிக்க வேண்டியது ஓபிஎஸ்தான் என்றும், சிகிச்சை தொடர்பாக எல்லா விஷயமும் பொறுப்பு முதல்வருக்கு தெரியும்" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கையே விட்டிருந்தார். ஆனால் மரணம் தொடர்பாக சிவி சண்முகம் பேட்டிக்கு அமைச்சர் ஜெயக்குமாரை உடன்படவில்லை என்றாலும், குறைந்தபட்சம் கருத்துகூட சொல்லாதது ஆச்சரியமாக உள்ளது.
தோண்ட.. தோண்ட..
2 வருஷம் கழித்து மரணம் சம்பந்தமாக வித விதமான கருத்துக்களை, சர்ச்சை தரும் பேட்டிகளை, ஒரே கட்சியில் உள்ளவர்களே மாறி மாறி தெரிவித்தால், மக்கள் என்ன நினைப்பார்கள்? என்றும் வரப்போகிற தேர்தலுக்கு இதெல்லாம் பின்னடைவை பெற்று தந்துவிடாதா என்றும் அதிமுகவினரே புலம்ப ஆரம்பித்துள்ளனர். தோண்ட தோண்ட பிரச்சனை என்பதெல்லாம் மாறி, தோண்டாமலேயே பிரச்சனை ஆகி வருவது ஜெயலலிதா மரணம்தான்!!