7 தமிழர் விடுதலை.. தமிழக எம்.பிக்கள் மொத்தமாக போய் அமித்ஷாவை பார்த்திருக்கலாமே!
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழரை விடுதலை செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஒட்டுமொத்த தமிழக எம்.பிக்களும் திரண்டு போய் வலியுறுத்தியிருந்தால் இன்னும் வலிமையானதாக இருந்திருக்கும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கருத்து.
பேரறிவாளவன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் அமித்ஷாவிடம் இன்று மனு அளித்தார். அப்போது தமிழக எம்.பி.க்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் மட்டும் உடன் இருந்தனர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ராஜ்யசபா எம்.பி. வைகோவை அற்புதம்மாள் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன், நல்ல முயற்சி. இனியாவது எழுவர் விடுதலை சாத்தியமாகட்டும். முயற்சி வெற்றி பெறட்டும் என தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த மொத்த எம்.பி.களும் ஒன்று சேர்ந்து சந்தித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றும் ஏகலைவன் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற முக்கியமான விஷயங்களில் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு வலியுறுத்துவதுதான் பலனளிக்கும் என்பது உணர்வாளர்களின் கருத்து.
அப்படியே திமுகவுடன் அதிமுக எம்பிக்கள் இணைய மறுத்தால், அதிமுக அரசு ஆளுநருக்கு அனுப்பிய அமைச்சரவை தீர்மானத்தை எடுத்துக் கொண்டு போய் ஆளுநரை முடிவெடுக்க சொல்லுங்கள் என அக்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தலாம். அஞ்சல்துறை தேர்வுக்கு எப்படி தமிழகம் ஒன்று திரண்டு குரல் கொடுத்து சாதித்ததோ அதைத்தான் இதுபோன்ற தமிழகத்தின் பிரதான பிரச்சனைகளில் வெளிப்படுத்த வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
பொதுவாக ஈழத் தமிழர் பிரச்சனையில் தொடக்க காலம் முதலே அனைத்து தலைவர்களிடையே ஒரு இணக்கமான சூழல் இல்லாத நிலைதான் நீடிக்கிறது. எம்ஜிஆர்-கருணாநிதி தொடங்கி இன்று வரை இதே நிலைமைதான். தங்களது அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பால் ஈழத் தமிழர் உரிமை என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைவதுதான் தமிழர்களின் எதிர்பார்ப்பும் கூட.
நீட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினோ என என்னதான் மத்திய அரசு திட்டங்களை திணித்தாலும் ஒற்றுமையால் அவற்றை எதிர்கொள்ள முடியும் என தமிழகம் நிரூபிக்குமா?