சிகாகோ 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்
Recommended Video
சென்னை: சிகாகோ 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழக அரசு சார்பாக 25 பேர் பங்கேற்க உள்ளனர் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறுகிறது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
சிகாகோவில் ஜூலை 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டுக்கு தமிழக அரசு ஆதரவளித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சிகாகோ மாநாட்டில் தமிழக அரசு சார்பாக 25 பேர் பங்கேற்க உள்ளனர்.
இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன என்றார்.
தமிழக அரசு நிதி
சிகாகோ மாநாட்டில் தமிழக அரசு சார்பாக 25 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்காக தமிழக அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது.
விசா பிரச்சனை
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சுமார் 6,000 பேர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து செல்லும் ஆய்வாளர்கள் சிலருக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வாளர்களை தமிழக அரசானது சிறப்பு அனுமதி மூலம் அழைத்துச் செல்லும்.
ஜூலை 4 நிகழ்ச்சிகள்
ஜூலை 4-ல் சாலமன் பாப்பையா குழுவினரின் சிறழ்ப்பு சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. இளைஞர்களுக்கான போட்டிகள், குறும்பட போட்டிகள், கங்கை கொண்ட சோழன் மாவீரன் இராஜேந்திர சோழனின் நாட்டிய நாடகம் அரங்கேற உள்ளன. ஜூலை 5ஆம் தேதி தமிழ் இசை, கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகள் நடைபெறும் .
சிகாகோவில் திருவள்ளுவர் சிலை
ஜூலை 5-ந் தேதி மாலை சிகாகோவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இயற்கையில் பிறந்த தமிழ் - இசைப்பெரும் நாட்டிய நாடகம் நடைபெறும்.
அமெரிக்காவில் முப்பெரும் விழா
இந்த மாநாடு தமிழர்களின் பெருமையை உயர்த்தி பிடிக்கும். சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா மற்றும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் 32-வது தமிழ் விழா ஆகியவை இணைந்து முப்பெரு விழாவாக நடைபெற உள்ளது. இவ்வாறு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.