இந்தி கூடாது என்பது அல்ல.... வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது ... இதுதான் தமிழ்நாட்டின் குரல்!
சென்னை: தமிழகம் எந்த ஒரு மொழிக்கும் எதிரானது அல்ல; ஆனால் பிற மொழிகளை கட்டாயமாக தம் மீது திணித்தால் அதை எதிர்த்து சர்வபரிதியாகத்துக்கும் தம்மை உட்படுத்திக் கொண்டு போர்க்களம் புகும் தமிழகம் என்பதே வரலாறு.
தமிழர்கள் பிற மொழிகளை நேசிக்கக் கூடியவர்கள். தமிழில் சமஸ்கிருதம், அரபு, இந்தி சொற்கள் ஏராளமாக கலந்து தமிழ்ச்சொற்களாகவே உருமாறிவிட்டன. தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் தூய தமிழில் இருந்து சமஸ்கிருதமாகவே மாறியிருக்கிறது.
ஆனால் இந்தி திணிப்பு என்கிற போது தமிழகம் தமது போர்க்குணத்தை காட்டுகிறது. இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே வடவர் எதிர்ப்பு என்பது தமிழகத்தில் ஊறிப் போன ஒன்றாவே இருந்து வந்தது.
இந்தி கட்டாயம் இல்லை... இது அழகான தீர்வு.. மத்திய அரசுக்கு சபாஷ் போட்ட ஏ.ஆர். ரஹ்மான்
1937 மொழிப் போர்
இதனால்தான் 1937-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் அப்போதைய முதல்வர் ராஜாஜி இந்தியை கட்டாயப் பாடமாக்க முயன்றார். அப்போது மூண்டதுதான் முதலாவது மொழி காக்கும் போர்..
தந்தை பெரியார் முழக்கம்
இன்று நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத உக்கிரமான அறவழி யுத்தம் அது. 3 ஆண்டுகள் அறவழியில் நீடித்த அந்த மொழிப்போரில்தான் 'தமிழ்நாடு தமிழருக்கே' என தந்தை பெரியார் முன்வைத்தார். பின்னர் 2-ம் உலகப் போரை முன்வைத்து ராஜாஜி பதவி விலக, அப்போதைய ஆளுநரை தந்தை பெரியார் வலியுறுத்தி கட்டாய இந்தி ஆணையை திரும்பப் பெற வைத்தார்.
1948 மொழி போர்
நாடு விடுதலை பெற்ற போது 1948-ல் தேசம் முழுவதும் இந்தியை கட்டாயப் பாடமாக்க முயற்சித்தது புதிய இந்திய அரசு. அப்போதும் தமிழ்நாடுதான் கொந்தளித்து வீதிக்கு வந்து போராடியது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி என பெருந்தலைவர்கள் அனைவரும் இந்தி திணிப்புக்கு எதிரான களத்தில் தீவிரமாக களமாடினர். பின்னர் இந்தி திணிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதுதான் 2-வது மொழிப் போர்.
1965 மொழிப் போர்
1965-ம் ஆண்டு 3-வது கட்டாய இந்தி திணிப்பு முயற்சிக்கு உயிரூட்டப்பட்டது. அதுவரை இல்லாத வகையில் தமிழகத்து இளைஞர்கள், மாணவர்கள் ஒரு மாபெருயும் யுகப் புரட்சியையே நடத்தினர். இன்றைய அரசியல் தலைவர்களான வைகோ உள்ளிட்டோர் அன்றைய 3-வது இந்தி திணிப்பு எதிர்ப்பு களத்தின் தளபதிகள். அந்த 3-வது மொழிப்போர்தான் காங்கிரஸுக்கு தமிழகத்தில் கல்லறை கட்டியது.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
அதன் பின்னர் வெவ்வேறு வடிவங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதும் தமிழகம் அதை எதிர்த்து தொடர்ந்து போராடுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது ஏதோ இந்தி மொழிக்கு எதிரான போராட்டம் போல பேசுவதும் சித்தரிப்பதும் அறிவு நாணயமற்ற செயல். தேசத்தின் விடுதலைக்கு முன்பு இருந்தே இந்தி திணிப்பைத்தான் தமிழகம் உக்கிரமாக எதிர்த்து களமாடிக் கொண்டிருந்தது.
இந்தி பேசாத மாநிலங்களும் எதிர்ப்பு
நேற்று வரை தமிழகம் மட்டுமே இந்தி திணிப்பு எதிர்ப்பு எனும் சுயமரியாதைக் குரலை எழுப்பியது. இன்று தமிழகத்துடன் இணைந்து ஒட்டுமொத்த இந்தி பேசாத மாநிலங்கள் இணைந்து கிளர்ச்சியில் குதித்துள்ளன. தமிழகத்தில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இந்தியை கற்றுக் கொள்கின்றனர்; இந்தி பிரசார சபை மூலம் ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் இந்தி மொழியை விருப்பத்தின் பேரின் கற்றுக் கொள்கின்றனர். அதை பெற்றோர்களே விரும்பியும் செய்து வருகின்றனர். இங்கே பிரச்சனை இந்தியை கற்பது அல்ல. இந்தியை தமிழகம் எதிர்க்கிறது என்பது அல்ல.. தேவையே இல்லாத நிலையில் பிற மாநில மொழியை கற்றுக் கொள் என ஏகாதிபத்தியத்தனமாக திணிப்பதுதான் சிக்கல். இதே தமிழ்மொழியை குஜராத்தியர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி ஒரு அசூயையும் வெறுப்பும் வருமோ அதுதான் இந்தி பேசாத மாநிலங்களின் இன்றைய நிலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.