கனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு
சென்னை: மத்திய கனிமவள சீராய்வு ஆணைய விசாரணையின் போது அதிகாரிகள் இந்தியில் பேசியதற்கு, தமிழ்நாடு அரசு தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானசேகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சகத்திடம் கேட்ட போது தமது மனுவைத் திருப்பி அனுப்பியதுடன் இந்தியில் பதிலளித்துள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார்.
தமக்கு இந்தியில் பதில் தெரிவித்ததை எதிர்த்து ஞானசேகரன் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்தி மொழி தமக்கு தெரியாது; தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்றும் இந்தியில் வழங்கிய பதிலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தமக்கும் இந்தி தெரியாது என பகிரங்கமாகவே கூறினார். இது தொடர்பாக மத்திய அரசு ஆகஸ்ட் 16-ந் தேதிக்குள் பதிலளிக்கவும் நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கல் வெட்டியெடுக்கும் குத்தகைதாரர்களிடம், தண்டத் தீர்வை செலுத்தக் கேட்டு தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து, டெல்லியில் உள்ள மத்திய கனிமவள சீராய்வு ஆணையத்தில், தனியார் சிமெண்ட உற்பத்தியாளர்கள் முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, காணொளி காட்சியில் விசாரணைக்கு வந்தபோது, ஆணைய அதிகாரிகள், தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் இந்தியில் பேசியுள்ளனர். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அரசு வழக்கறிஞர், தனக்கு இந்தி தெரியாது என்றும், தனக்கு தமிழ் தெரியும், ஆங்கிலம் தெரிந்தால் பேசுங்கள், தான் பதில் கூறுவதாக தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சீராய்வு ஆணைய அதிகாரிகள் பின்னர் ஆங்கிலத்தில் பேசினர். தமிழ்நாடு அரசு வழக்கறிஞரின் எதிர்ப்பை சற்றும் எதிர்பார்க்காத மத்திய சீராய்வு ஆணையத்தின் அதிகாரிகளும், வழக்கு விசாரணைக்காக ஆஜராகியிருந்த மத்திய கனிமவளத்துறை அதிகாரிகளும் இதனைக் கேட்டு திகைப்படைந்தனர்.
சமீபகாலமாக, மத்திய அரசு துறைகளும், அதிகாரிகளும் இந்தியில் தகவல் பரிமாற்றம் செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில், தமிழ்நாடு அரசும், அரசு அதிகாரிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவும் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.