சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தமிழக அரசு தோல்வி -மு.க.ஸ்டாலின் சாடல்
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம்.. பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார் அரசகுமார்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அதிர்ச்சியளிக்கிறது
வன்புணர்வுக் கொடுமைகளில் ஈடுபடும் கடைந்தெடுத்த கயவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட 'நிர்பயா' நிதியில் தமிழ்நாட்டிற்கென அனுமதிக்கப்பட்ட 190 கோடி ரூபாய்த் திட்டங்களில், வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே அ.தி.மு.க. அரசு செலவு செய்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
கேள்விக்குறி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க. அரசு உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துப் போக, காவல் துறையை அப்பட்டமாகப் பயன்படுத்தியதன் விளைவாக, இன்றைக்கு மாநிலத்தில் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் என அனைவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
சட்டம் ஒழுங்கு
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதிலும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் படுதோல்வி நிரூபணமாகியுள்ளது. இன்றைக்குப் ‘பட்டப் பகலிலேயே கூட' ஒரு பெண் சுதந்திரமாக, பாதுகாப்பாக நடந்து போக முடியாத அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பேராபத்து சூழ்ந்திருக்கிறது.
எதிர்க்கட்சி
இதையெல்லாம் சுட்டிக்காட்டினால், "ஸ்டாலின் அரசியல் செய்கிறார்" என்று விதண்டாவாதமாக முதலமைச்சர் பேட்டியளிப்பார். ஆனால் பொறுப்புள்ள, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அ.தி.மு.க. அரசின் தவறுகளை - ஊழல்களை - அலட்சியங்களை, மக்கள் விரோதச் செயல்களை நான் சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருப்பேன்.
உண்மை நிலவரம்
எத்தனை பொய்கள் சொல்லி, அதன் மூலம் அரசியல் செய்தாலும், முதலமைச்சர் தனது நிர்வாகத் திறமையின்மையை திசை திருப்ப நினைத்தாலும், உண்மை நிலவரத்தை நான் மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டுதான் இருப்பேன்; தயங்க மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.