தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் எழுந்த சிறு மாநில பிரிவினை கோரிக்கைகள்!
சென்னை: தமிழ்நாட்டை சிறு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை காலந்தோறும் எழுந்தாலும் அவை அனைத்தும் நடைமுறைக்கு வராமலே போய்விட்டன.
தமிழகத்தில் நீண்டகாலமாக முன்வைக்கப்படுகிற கோரிக்கை கொங்குநாடு தனி மாநில கோரிக்கை. முதுபெரும் அரசியல் தலைவர் கோவை. செழியன் இந்த கோரிக்கையை தீவிரமாக முன்னெடுத்தார்.
அவருக்குப் பிந்தைய கொங்குநாட்டை மையமாக வைத்து செயல்படும் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் கொங்குநாடு தனி மாநில கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதைத்தான் அமமுக நிர்வாகி பொங்கலூர் மணிகண்டனும் இன்றைய அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.
வடதமிழ்நாடு தனி மாநில கோரிக்கை
அதேபோல் வடதமிழ்நாடு மாநில கோரிக்கையும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாமகவால் முன்னெடுக்கப்பட்டதுதான் வடதமிழ்நாடு தனி மாநில கோரிக்கை.
தென் தமிழ்நாடு தனிமாநிலம்
நிர்வாக வசதிக்காக தமிழ்நாடு மாநிலத்தை பிரிக்கலாம் என்பது பாமகவின் நிலைப்பாடு. 1990களின் இறுதியில் தென் தமிழ்நாடு தனி மாநில கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. மருத்துவர் சேதுராமன் இந்த கோரிக்கையை முன்வைத்து இயக்கங்களை நடத்தினார்.
திருச்சிக்கு தலைநகர் மாற்றம்
இந்த கோரிக்கைகளுக்கும் முன்னதாக தமிழ்நாட்டின் தலைநகரை மாற்ற வேண்டும் என்கிற ஒரு கோரிக்கையும் இருந்தது. தமிழ்நாட்டு தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்பதில் தந்தை பெரியார் தீவிரமாக இருந்தார். அதற்கு முன்னோடியாக தமது செயல்பாடுகளை திருச்சியிலும் இருந்தும் அவர் மேற்கொண்டார்.
தாயக பெருநிலப்பரப்பு
பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது நிறைவேறாமல் போனது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் குமரி முதல் சென்னை வரை கோவை முதல் கும்மிடிப்பூண்டி வரை என்கிற பெருநிலப்பரப்பு ஒட்டுமொத்தமும் தங்களுடையதுதான் என்கிற மனோபாவம் ஆழப் படிந்து இருக்கிறது. இதனால் இயல்பாகவே மாநில பிரிவினைகளுக்கான இயக்கஙள் முழு வீச்சில் களம் காணமுடியாத நிலையே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.