வாவ்.. தொழில் வளர்ச்சியோடு.. கல்வியிலும் முத்திரை பதித்த திருப்பூர், ஈரோடு.. பெரம்பலூரும் பிரமாதம்!
பிளஸ் 2 தேர்வு முடிவில், திருப்பூர் முதலிடம், ஈரோடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம்தான் முதலிடத்தை பிடித்துள்ளது.
இன்று காலை பிளஸ் 2 தேர்வு வெளியானது. இந்த தேர்வில் நம் மாநிலத்தில் மொத்தமாக 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.64 சதவிகிதம் மாணவிகளும், 88.57 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திருப்பூர் மாவட்டம் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ஈரோடு மாவட்டம் இடம்பெற்றுள்ளது. அதாவது 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக பெரம்பலூர் மாவட்டம் 95.15 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
வரவேற்பு
இதனால் அந்தந்த மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். வழக்கமாக எப்பவுமே விருதுநகர் மாவட்டம்தான் மாநிலத்திலேயே முதலிடத்தை பிடிக்கும். ஆனால், இந்த முறை திருப்பூர் 95.37 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
கல்வி வளர்ச்சி
முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ள திருப்பூர், ஈரோடு இவை இரண்டுமே கொங்கு மண்டலம் பெல்ட்டில் உள்ள மாவட்டங்கள் ஆகும். தொழில் வளர்ச்சிக்குப் பெயர் போன மாவட்டங்கள் இவை. இங்கு இப்போது கல்வியும் வளர்ச்சி அடைந்திருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. முன்பு இந்த இரண்டையும் கையில் வைத்திருந்தது சென்னை மட்டுமே.
பள்ளி நிர்வாகம்
சென்னையின் ஆதிக்கத்தை இப்போது பிற மாவட்டங்கள் தகர்த்து விட்டன. ரொம்ப காலமாகவே தென் மாவட்டங்கள்தான் முன்னணியில் இருந்து வந்தன. அதை தற்போது மேற்கு தத்தெடுத்துள்ளது. கல்விக்கான முக்கியத்துவத்தை இந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிகமாக எடுத்து கொண்டதா, அல்லது பள்ளி நிர்வாகங்களே சிரத்தை எடுத்து மாணவர்களின் தேர்ச்சிக்கு உதவியனவா என தெரியவில்லை. ஆனால் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகவே இந்த சாதனை அமைந்துள்ளது.
வியப்பு - சபாஷ்
அதேபோல பெரம்பலூர் மாவட்டம் என்பது பின்தங்கிய மாவட்டம். இங்கெல்லாம் எந்த அளவுக்கு கல்வி வளர்ச்சி உள்ளது என்பது கேள்விக்குறியாக அன்று இருந்தது. சென்னை, மதுரை, சேலம், கோவை என பெரிய பெரிய பெரிய வளர்ச்சி பெற்ற மாவட்டங்கள் செய்யாத ஒன்றை பின்தங்கிய மாவட்டம் என்று சொல்லப்படும் பெரம்பலூர் 3-வது இடத்தை பெற்று தமிழகத்தின் மற்ற கல்வி மாவட்டங்களையே வியப்புக்குள்ளாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
சபாஷ் செல்லங்களா!