பைக்ல 3 பேரு போன ஆக்சன் எடுக்குறதில்ல. போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு இருசக்கரவாகனம் மீது கார் மோதிய விபத்து ஒன்றில், பைக்கில் சென்று காயமடைந்த கணேசன், ரகு ஆகியோர் இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு நடந்தது.
அப்போது நீதிபதி வேலுமணி, "மனுதாரர்கள் உள்ளிட்ட நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது,ஓட்டுபவருக்கு கைப்பிடியை இயக்க சிரமம் ஏற்படும் என்பதாலும், நிலைதடுமாறும் சூழல் ஏற்படும் என்பதாலும் இந்த விபத்தில் அவர்களுக்கும் சமமான பங்கு இருக்கிறது.
அதனை கருத்தில் கொண்டே தீர்ப்பாயம் இழப்பீடு நிர்ணயித்துள்ளது. எனவே அவர்களின், மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றார்.
இதனிடையே இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் பயணம் செய்வது விதிகளை மீறி செயல். ஆனால் இரண்டு பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் நீதிபதி வேலுமணி கண்டனம் தெரிவித்தார்.