எந்த காரிலும் அதிமுக கொடிகளை பயன்படுத்தக் கூடாது.. காவல் துறை அறிவிப்பை மீறி பறந்த கொடிகள்!
சென்னை: சசிகலா கார் உள்பட எந்த கார்களிலும் அதிமுக கொடிகளை பயன்படுத்தக் கூடாது என காவல் துறை தடை விதித்ததையும் மீறி அதிமுக கொடி பறந்தது.
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கொரோனாவுக்கு சிகிச்சையையும் முடித்துக் கொண்டு ஒரு வாரம் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியிருந்தார் சசிகலா. தற்போது தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்து சசிகலா காலை தமிழகத்திலிருந்து சென்னை புறப்பட்டார்.
சசிகலா வருகை தரும் கார் உள்பட எந்த காரிலும் அதிமுக கொடிகளை கட்டக் கூடாது என தமிழக காவல் துறை தடை விதித்துள்ளது. சசிகலா செல்லும் காரை பின்தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொருந்தும்
இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பி விதித்த கட்டுப்பாடுகள் அந்த மாவட்ட நிர்வாகிகளுக்குத்தான் பொருந்தும். சசிகலா சென்னை வருகையின்போது கட்டுப்பாடுகள் குறித்து எங்களுக்கு இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. சட்டத்திற்கு உள்பட்டு மக்களுக்கு இடையூறின்றி சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பார்கள் என்றார்.
வரவேற்பு
ஆனால் தடையை மீறி சசிகலாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது பின்னால் 100-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து சென்றன. தமிழக எல்லையில் அவரது காரில் இருந்த கொடி அகற்றப்பட்டது. எனினும் அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் சென்றார்.
மேள வாத்தியம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வரப்பட்டன. அவற்றை முதலில் பறிமுதல் செய்த போலீஸார் பின்னர் அதை அவர்களிடமே திருப்பி கொடுத்துவிட்டனர். செண்டை மேளங்கள் முழங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த மேள வாத்தியமும் முழங்கப்பட்டது.
அதிமுக கொடி
தொண்டர்கள் நிறைய பேர் கூடக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் ஆயிரக்கணக்கானோர் சாலையின் இரு மருங்கிலும் கூடினர். அதிமுக கொடி கட்டப்பட்டதற்காக தமிழக எல்லையில் சசிகலாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.