தியாகத்தின் மறு உருவம் அன்னை... தலைவர்கள் அன்னையர் தின வாழ்த்து
சென்னை: உலக அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் சூழலில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணையில்லை எனத் தெரிவித்துள்ளார். என்றுமே தன்னலம் பாராது மற்றவர்களின் நலனை மட்டுமே சிந்தையில் நிறுத்தி ஓயாது உழைக்கும் தியாக உள்ளங்கள் என தாய்மார்களை ஓ.பி.எஸ்.பெருமைப்படுத்தியுள்ளார்.
இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், தியாகத்தின் உருவம் அன்னை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னம்பிக்கைக்கு உதாரணமும் அன்னைதான் என பெருமைப்படுத்தி உள்ளார். அன்பு, கனிவு, அக்கறை ஆகியவற்றின் அமுத சுரபி அன்னை என்றும், தாயின்றி இவ்வுலகில் ஒரு அணுவும் அசையாது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மட்டுமே வருவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டியது கடமை எனக் குறிப்பிட்டுள்ளதுடன், அன்னையர்கள் அனைவருக்கும் தமது வாழ்த்தையும் பகிர்ந்துள்ளார்.
திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, தனது தயார் தயாளு அம்மாளுடன் நிற்கும் படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், துணையாக, தூணாக இருக்கும் தாயை எந்நாளும் போல் இந்நாளும் கொண்டாடுவோம் என்றும், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் எனவும் தனது ட்வீட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கிற்கு பிறகும் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுக்காமல் தாய்மார்களிடம் கொடுங்கள்- கஸ்தூரி
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் ஏற்கனவே இது தொடர்பாக தனி வாழ்த்து அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.